
மக்கோத்தா தொகுதி இடைத்தேர்தல்… தேசிய முன்னனி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தேர்தல் பணிக்குழுவை தொடக்கி வைத்தார் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உடனிருந்தார்
குளுவாங், செப்.12-
மக்கோத்தா தொகுதி-யில் உள்ள 5,144 இந்திய வாக்காளர்களின் ஆதரவை தேசிய முன்னணி வேட்பாளருக்கு திரண்டும் நோக்கத்தில் மஇகா பணிக்குழுவை அதன் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணனுடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ஜொகூர் மாநிலம், குளுவாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியான N29 மக்கோத்தாவில் வரும் செப்டம்பர் 28ஆம் நாள் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மக்கோத்தா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தேர்தல் பணிக்குழுவை குளுவாங் நகரில் புதன்கிழமை மாலையில் நடவடிக்கையையும் தொடக்கிவைத்தார்.

நாட்டில் தேசிய அளவில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்திருப்பதைப் போல ஜோகூர் மாநிலத்திலும் ஒற்றுமை அரசு அமைந்துள்ளது. அந்த வகையில், தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் இணைந்து இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
தேசிய முன்னணியின் அம்னோ வேட்பாளர் குளுவாங் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் உசேன் சைட் அப்துல்லா வெற்றி பெறுவது உறுதி என்றாலும் மக்கோத்தா தொகுதியில் உள்ள 5,144 இந்திய வாக்காளர்களின் ஆதரவையும் ஒருமுகமாகத் திரட்டி, தேசிய முன்னணி வேட்பாளர் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறுவதற்கான களப்பணியை துரிதப் படுத்தும் நோக்கில் இந்த மஇகா பணிக்குழு அமைந்துள்ளது.
இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள பொருளாதார-சமூக கல்வி தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதற்கு, குறிப்பாக ம்ககோத்தா தொகுதி இந்தியர்கள் எதிர்கொள்ளும் இடுகாட்டு நிலச் சிக்கல் தீர்க்கப்படுவதற்கு தேசிய முன்னணி வெற்றி துணையாக அமையும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்தின் நண்பனாகத் திகழும் ஒரே அரசியல் இயக்கம் மஇகாதான் என்பதை இந்திய சமுதாயம் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது. இருந்தாலும், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களின் ஆதரவை நாட வேண்டியது நம் கடமை; அதைப்போல, தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றிபெற வைத்து, அதன்வழி மஇகா கரங்களை வலுப்படுத்துவது இந்திய வாக்காளர்களின் கடமை என்பதை இந்திய சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டியது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் தேசியத் தலைவர் குறிப்பிட்ட்டிருந்தார்.
குளுவாங் வந்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம்.ஞரவணன் உள்ளிட்ட தலைவர்களை மாநிலத் தலைவர் டத்தோ அசோகன், குளுவாங் தொகுதித் தலைவர் ஜி.இராமன், துணைத் தலைவர் சி.சரஸ்வதி உள்ளிட்ட மாநில-தொகுதி பொறுப்பாளர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



