
திருக்குறளை வாசித்து ஒப்பித்து சாதனை செய்த 800 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனை மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது
ஈப்போ, செப்.28,-
பேராக் மாநிலத்தில் முதல் முறையாக 800 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திருகுறளை வாசித்து அதன் பொருளை 30 வினாடிக்குள் ஒப்புவிக்கும் போட்டி கிந்தா ஆசிரியர் பயிற்சி கழகத்தில் சிறப்பாக நடந்தேற்றியது என்று இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவரும், சமூகத் மற்றும் கல்வி மேம்பாட்டு இயக்கத்தின் செயலாளர் மணிவண்ணன் கந்தசாமி கூறினார்.
இந்த போட்டி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதோடு பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். இப்போட்டி முதல் முறையாக நடைபெறுவதோடு 86 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிகொணர்ந்துள்ளனர்.
இவ்வேளையில் எங்களுடன் இணைந்து செயல்படும் பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்திற்கும் அதன் தலைவர் பழனி சுப்பையாவிற்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த போட்டி நடைபெறுவதற்கான காரணம் என்னவெனில், இன்றைய தலைமுறைக்கு திருக்குறளின் முக்கியதுவம் பற்றி எடுத்துரைப்பதாகும். பல அந்நிய நாடுகளில் திருக்குறளின் பெருமையறிந்த அதனை மொழி மாற்றம் செய்து படித்து வருகின்றனர்.
அத்துடன், வாசிக்கும் பண்பு தற்போது நமது சமூகத்தினரிடையே சுணக்கம் கண்டு வருகிறது. ஆகையால், திருக்குறளை அனுதினமும் வாசிக்கும் பழக்கத்தை இளம் தலைமுறைக்கு உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் மீண்டும் யு.பி.எஸ். ஆர். தேர்வு கொண்டு வர வேண்டும். இந்த தேர்வு வாயிலாக நமது மாணவர்கள் மீண்டும் படிக்கும் அல்லது வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முடியும். அத்துடன், இந்த தேர்வு வாயிலாக மாணவர்கள் அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து செயல்படுவார்கள். ஆகையால், யு.பி.எஸ். ஆர் தேர்வை மீண்டும் அமலாக்கம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை மனு வைத்தார்.
பேராக் மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் இன்று இளம் தலைமுறை பேசும் வள்ளுவம் போட்டியில் 86 தமிழ்ப்பள்ளிகள் கலந்துக்கொண்டனர். இப்போட்டியில் 800 மாணவர்கள் கலந்துக்கொண்டனர் என்று பேராக் மாநில தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தலைவர் பழனி சுப்பையா கூறினார்.
இந்நிகழ்வில் , மலேசிய சாதனை புத்தகத்தில் இம்மாணவர்கள் படைப்பு இடம் பெற்றதோடு, சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராக் மந்திரி பெசார் 20 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது என்று அவரின் பிரதிநிதியான பேராக் ம.இ.கா தலைவர் தான்ஸ்ரீ எம்.இராமசாமி கூறினார்.
மேலும் 20 ஆயிரம் ரிங்கிட் வழங்க கோரிக்கை மனு வைக்கப்படும் என்று அவர் கருத்துரைத்தார். அதோடு, தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு அதிகாரியான ஆர். சுரேஸ் குமார் சிறப்பு வருகை மேற்கொண்டார்.



