ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப்பள்ளி 3 மாடிகளுடன் 30 லட்சம் வெள்ளியில் கட்டப்படும்! டத்தோ சகாதேவன் அறிவிப்பு
ரவாங் அக்.2-
உலு சிலாங்கூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் சுங்கை சோ தோட்ட. தமிழ்ப் பள்ளி மிக விரைவில் மூன்று மாடிகளுடன் மிகவும் கம்பீரமாக கட்டப்படவுள்ளது.
இதற்காக தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கி இருப்பதாக தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் தெரிவித்தார்.
தற்போது அமைந்துள்ள பழைய கட்டடத்திற்கு பதிலாக மூன்று மாடிகளுடன் புதிய பள்ளி கட்டடம் கட்டப்படும். பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்திற்கு சொந்தமான தோட்டங்களில் சுங்கை சோ தோட்டமும் ஒன்றாகும்.
அந்த வகையில் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு புதிய கட்டடம் எழுப்ப 30 லட்சம் வெள்ளியை தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் ஒதுக்கி உள்ளது என்று அவர் சொன்னார்.
ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி இன்று பணிவிடை பெற்றார்.
பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது டத்தோ சகாதேவன் இந்த இனிப்பான செய்தியை ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
இதனிடையே
ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி லிங்கப்பன் 35 ஆண்டுகால ஆசிரியர் பணிக்கு பின்னர் ஓய்வு பெற்றார்.
தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் தலைமையில் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தியை உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ், பள்ளி வாரியத் தலைவர் நடேசன்,
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் குமரேசன், மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ் எஸ். பாண்டியன், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, முருகன், ராஜேஸ்ராவ், உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் கலைவாணன் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
35 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ரவாங் சுங்கை சோ தோட்ட தமிழ்ப் பள்ளியில் ஆறு ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்தார்.
கருணை உள்ளம் கொண்ட தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி சுங்கை சோ தோட்ட தமிழ்ப்பள்ளி வளர்சிக்கு முக்கிய பங்காற்றினார் என்பதை மறுக்க முடியாது என்று டத்தோ சகாதேவன் தமது உரையில் குறிப்பிட்டார்.



