
2 தேசியத் தலைவர்கள் உருவான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஓற்றுமை அரசாங்கம் ஒரு மாநாட்டு மண்டபத்தை உருவாக்குமா? தொகுதி வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
சுங்கை சிப்புட்,அக்.5-
துன் சம்பந்தன், துன் சாமிவேலு ஆகிய இரு தேசிய தலைவர்களை நாட்டுக்கு அளித்த சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அங்கு ஒரு மாநாட்டு மண்டபத்தை ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உருவாக்குவாரா என்று தொகுதி மக்கள் எதிர்பார்ப்போடு கேள்வி எழுப்பியுள்ளறனர்.
ஈவூட் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் நடப்பு எம்பியான கேசவன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாரேத் தவிர, அதன் தொடர்பில் வேறு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.
ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனுக்கு சுங்கை சிப்புட் தொகுதி மக்கள் வாய்ப்பளிக்கவில்லை என்றாலும், இந்தத் தமிழ்ப் பள்ளியின் உருவாக்கத்திற்கு தேசிய முன்னணி அரசின் ஒத்துழைப்புடன் அடித்தளம் அமைத்தவர் இவர்தான் என்றால் அது மிகையில்லை.
34 ஆண்டுகளாக சுங்கை சிப்புட் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்த துன் ச.சாமிவேலு, இந்தத் தொகுதிக்காக எண்ணற்ற மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், அவரும் அவரின் முன்னோடி துன் சம்பந்தனும் இந்த நாட்டிற்கும் தொகுதிக்கும் ஆற்றிய பணியை பாராட்டும் வகையில், ஈ வூட் தமிழ்ப் பள்ளியை அக்டோபர் 6-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை திறந்துவைக்க வரும் பிரதமர் அன்வார். இந்தத் தொகுதிக்கு ஒரு மாநாட்டு மணடபத்தை அறிவிப்பாரா என்று தொகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய சமுதாயத்தில் நாட்டின் உயரிய விருதான துன் பட்டத்தைப் பெற்ற சம்பந்தன், சாமிவேலு ஆகிய இருவரையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியவர்கள் சுங்கை சுப்புட் தொகுதி வாக்க்காளர்கள் என்பதை கருத்தில் கொண்டு, இன்னும் சில நாட்களில் அடுத்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கும் பிரதமர் சுங்கை சிப்புட் மக்களுக்கான மாநாட்டு மண்டபத்திற்குரிய நிதியை பட்ஜெட்டில் அறிவிப்பாரா என்றும் தொகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
எது எவ்வாறாக இருந்தாலும், நம்பிக்கைக் கூட்டணி அரசில் நிறுத்தப்பட்ட இந்தத் தமிழ்ப்பள்ளிக்கான கட்டுமானத்தை ஒற்றுமை அரசு தொடர்ந்து மேற்கொண்டதற்கும் இப்பொழுது அதைத் திறந்து வைப்பதற்கும் தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.



