
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலைநிகழ்ச்சி எப்படி நடைபெறும் என்பதை பார்க்கிறோம்-வியாபாரிகள் கலைநிகழ்ச்சியை நடத்தியே தீருவோம்-தயாளன் ஸ்ரீ பாலன் பிரிக்பீல்ட்சில் ஏற்பாட்டாளர்- வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், அக்.22-
பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தீபாவளி கலைநிகழ்ச்சி எப்படி நடக்கும் என்பதை பார்ப்போம் என்று அங்கு திரண்டிருந்த வியாபாரிகள் இக்கலைநிகழ்ச்சிக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த தீபாவளி கலைநிகழ்ச்சி ஒரு உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது. பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனை கொண்டு வந்து மேடையில் நிறுத்தி தங்கள் அரசியல் பலத்தை சாதிக்க நினைக்கிறார்கள் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது அரசியல் போராட்டம். அரசியலை தீபாவளி கலைநிகழ்ச்சியில் திணிக்கிறார்கள். கலை நிகழ்ச்சி நடத்தி எங்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்திய போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரிக்பீல்ட்ஸில் தற்காலிக தீபாவளி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடைகள் அமைக்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தப்பகுதியில் தீபாவளி கலை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தயாளன் ஸ்ரீ பாலன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இந்த கலை நிகழ்ச்சியால் யாருக்கும் எந்த பாதிப்பு வராது என்றும் வியாபாரிகளுக்கு இடையூராக இருக்காது என்றும் தயாளன் ஸ்ரீ பாலன் கூறிய போதும் வியாபாரிகள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் கலைநிகழ்ச்சி நடத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்படவுள்ளதாகவும் அன்பு இல்ல பிள்ளைகளுக்கு உதவிகள் நல்கப்படுவதாகவும் தயாளன் ஸ்ரீ பாலன் கூறிய போதும் வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கலைநிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும்
இக்கலை நிகழ்ச்சி எங்கு நடைபெறும் என்பதை விரைவில் DBKL முடிவு செய்யும் என்றும் தயாளன் ஸ்ரீ பாலன் சொன்னார்.



