
நல்லிணக்கத் திருநாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை அமையட்டும் தான்ஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கோலாலம்பூர்,டிச.24-
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்துவ பெருமக்கள், இறைத் தூதராம் ஏசுபிரான் அவதரித்த இந்த நாளை, கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடி குதூகலிக்கும் இந்த வேளையில் மலேசியத் திருநாட்டிலும் வாழ்கின்ற கிறிஸ்துவ சகோதரர்களும் இந்த தினத்தை உள்ளம் குதூகலிக்க, இல்லம் இன்பத்தில் திளைக்கும் வண்ணம் கொண்டாடி வருகின்றனர்.
மலேசியாவைப் பொருத்தவரை, அனைத்துப் பண்டிகைகளும் அனைத்து மக்களாலும் இனம்-மதம்-மொழி-பண்பாடு உள்ளிட்ட எல்லைகளைக் கடந்து, ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருவதை மலேசிய வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்தப் பண்டிகையும் இணையும் வண்ணம், அனைவரும் ஒன்றிணைந்து இக்கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடுவோம். நாட்டில் நடைபெறும் ஒற்றுமை அரசை வழிநடத்தும் பிரதமரின் மதானி சிந்தனைக்கு ஏற்ப, அனைத்து வேற்றுமையையும் ஒதுக்கிவைத்து, அதேவேளை சீராகவும் சிக்கனமாகவும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் மீண்டும் கிறிஸ்துமஸ் வாழ்த்து என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள பண்டிகைக்கால வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்



