
தீபாவளி பரிசாக பொதுமக்களின் வீட்டை உடைக்கலாமா? மனிதநேயம் இல்லாத அரசாங்கமா?
கோலகங்சார், அக்.25- சுமார் 21 இந்திய மற்றும் மலாய்கார குடும்பத்தாரின் வீட்டின் பின்புறத்தை உடைத்து தள்ளப்படும் என்ற நோட்டீஸ் ஒன்றை , கோலகங்சார் கிரீக் நெடுஞ்சாலையில் லிமான் கட்டி மலிவுவிலை வீடமைப்பு பகுதி மக்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர்.
இந்த எச்சரிக்கை நோட்டீஸை கோலாகங்சார் நகராண்மை கழகம் வெளியிட்டுள்ளது என்று இங்குள்ள மக்களின் பிரதிநிதியான ஜய்னி ஹாசான்( வயது 65) மிகவும் மனவேதனையுடன் கூறினார்.
இந்த நோட்டீஸ் வெளியான நாள் முதல் இங்குள்ள இந்திய, மலாய்கார மற்றும் சீன சமூக மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டனர். இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளியை கொண்டாடவுள்ள இந்திய அரசியல் சமூக சகோதர ர்களுக்கு இது ஒரு பேருடியாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 30 வருடங்களாக இங்குள்ள பல இன மக்கள் அதாவது 137 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோலகங்சார் நகராண்மை கழகம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் வாயிலாக வீட்டின் பின்புறத்தை இழுத்து கட்டியுள்ளதாக அனுமதி கடிதத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இங்குள்ள மலிவுவிலை வீடமைப்பு பகுதியின் புலோக் சி மற்றும் புலோக் டி பகுதியில் அமைந்துள்ள இந்த 21 வீடுகள் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த 30 வருடங்களாக இங்குள்ள பல இன மக்கள் இவ்வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் மூத்தகுடிகள், நோய்வாய்க்கு ஆளானவர்கள் மற்றும் குறைந்த வருமானத்தை கொண்டவர்கள் என்று அவர் கோடிக்காட்டினார்.
இந்த வீடுகளின் பின் புறத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஒன்று செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வீடமைப்பு குத்தகையாளரின் கெடுபிடி நடவடிக்கையால், கோலகங்சார் நகராண்மை கழகம் பணிந்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார் இங்குள்ள இந்திய மக்களின் பிரதிநிதியான முனியாண்டி முனுசாமி ( வயது 63).
இங்குள்ள வீடுகளின் பின்புறத்தில் இழுத்து கட்டுவதற்கு முதன்மை காரணம் வீட்டில் பிள்ளைகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அத்துடன் இங்குள்ள மக்கள் பி40 யை சேர்ந்தவர்கள். இவர்களில் தனித்து வாழும் தாய்மார்கள், சொந்த தொழில் செய்பவர்கள், ரப்பர் மரம் சீவும் தொழில் செய்து வருபவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த வீட்டின் பின்புறத்தில் முன்பு இழுத்து கட்டுவதற்கு சுமார் 60 ஆயிரம் ரிங்கிட் செலவாகியுள்ளது. இவ்வீடுகளை இழுத்து கட்டும் பொழுது நகராண்மை கழகமும், மாவட்ட நிலவள இலாகாவினரும் மூடிக்கொண்டு இருந்தனர். எந்தவொரு ்பிரச்சினையும் பதிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நோட்டீஸ் பிரச்சினை சுமூகமாக தீர்வு காணும் பொருட்டு ஒத்தழைப்பும் ஆதரவும் வழங்க நாங்கள் இங்குள்ள மக்கள் தயாராகவுள்ளோம். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பல முறை மன்றாடியும் பயனில்லாமல் போயிற்று. ஆகையால், சம்பந்தப்பட்ட அரசாங்க தரப்பினர் இவ்விவகாரம் குறித்து மனிதநேய பண்புடன் செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்வுகாண முற்படும்படி அவர் வலியுறுத்தினார்.



