
நீங்கள் உங்கள் தலைவருக்கு நடத்திய பிரார்த்தனைக்கு என்ன பெயர்? அதற்கு ஏன் அரசியல் சாயம் பூசவில்லை? ஒற்றுமை துறை துணையமைச்சராக இருந்து கொண்டு ஒற்றுமையை குழைக்க வேண்டாம் ம.இ.கா ஊடக பிரிவு தலைவர் எல்.சிவசுப்ரமணியம் சாடல்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஜன.5-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு ஆதரவாக பத்துமலையில் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனையை நடத்தவிருக்கும் ம.இ.காவின் நடவடிக்கைக்கு அரசியல் சாயம் பூசும் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இதற்கு முன் தன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்காக ஒரு ஆலயத்தில் மேற்கொண்ட நிகழ்வுக்கு என்ன பெயர் என்று ம.இ.கா ஊடகப்பிரிவு தலைவர் எல்.சிவசுப்ரமணியம் கடுமையாக சாடியுள்ளார்.
அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சிறையில் இருந்த டத்தோஸ்ரீ அன்வாருக்கும் அவரது குடும்பத்தினருக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தியற்கு என்ன பெயர்? இதற்கு ஏன் அரசியல் சாயம் பூசவில்லை? ம.இ.கா செய்தால் ஆலயம் வழிபாட்டுத் தளம் என்றும் அரசியல் நோக்கத்திற்காக அதனை பயன்படுத்த கூடாது என்று அரசியல் சாயம் பூசும் சரஸ்வதி கந்தசாமி தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சராக இருந்து கொண்டு ஒற்றுமையை குழைக்க முயல வேண்டாம் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்ரமணியம் சாடினார்.
ம.இ.காவை பற்றி பேச நீங்கள் யார்? ம.இ.காவில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள். ம.இ.காவை சீண்டி பார்த்து அரசியல் நடத்துவதுதான் உங்களுக்கு பிழைப்பா? உங்கள் வேலையை பார்க்க வேண்டியதுதானே என்று சிவசுப்ரமணியம் கடுமையாக சாடினார்.
டத்தோஸ்ரீ நஜீப்பிற்காக பத்துமலையில் நடத்தப்படுவது ஒரு சிறப்பு பூஜை, பிரார்த்தனை. இது அரசியல் கூட்டம் அல்ல. மாறாக இந்திய சமுதாயத்திற்காக அதிகம் உதவி செய்த ஒரு தலைவனுக்கு செலித்தப்படும் சிறப்பு பூஜை மட்டுமே. இதற்கு உள்நோக்கத்துடன் அரசியல் சாயம் பூசுவது உங்களின் அரசியல் நோக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்றார் சிவசுப்ரமணியம்.
மாமன்னரின் அறிவுரைக்கு ஏற்ப போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ம.இ.கா செயல்படுகிறது. பும்ராஜெயாவில் கூடுவதை காட்டிலும் பத்துமலையில் சிறப்பு பூஜை நடத்துவது ஆலயத்தின் புனித தன்மையை கெடுத்து விடாது. ஆனால், நீங்கள் உங்கள் தலைவருக்காக செய்த பிரார்த்தனையை மறந்து விட்டு நஜீப்பிற்காக ம.இ.காவின் சிறப்பு பூஜைக்கு அரசியல் சாயம் பூசும் உங்களை என்னவென்று சொல்வது?
நீங்கள் ஒரு தேசிய ஒற்றுமை துணையமைச்சர். ஆனால், நீங்கள் செய்யும், பார்க்கும் வேலையெல்லாம் ஒற்றுமையை குழைக்கும் வகையில் இருக்கிறது. நீங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள். அதுதான் உங்களுக்கு சிறப்பு-மதிப்பு. அதைவிடுத்து ஒற்றுமை குழைக்கும் வேலையை பார்க்க வேண்டாம் என்று ம.இ.கா ஊடக பிரிவு தலைவர் சிவசுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



