
கைதிகள் தாக்கப்பட்டதால் ஒருவர் மரணம் நேர்மையான விசாரணை அவசியம் – டாக்டர் பி.இராமசாமி
தைப்பிங், ஜன.27- தைப்பிங் சிறைச்சாலையில் 100 க கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் ( வாடன்கள்) கடுமையாக கொடூரமான முறையில் தாக்கியதால் 63 வயது சீன ஆடவர்( கைதி) இறந்து விட்டார். அத்துடன், மேலும் பலர் பயங்கரமாக தாக்கப்பட்டு இன்னமும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்காதது மிகவும் வேதனையளிப்பதாக முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வரும், உரிமைக்கட்சியின் தலைவருமாகிய டாக்டர் பி.இராமசாமி தைப்பிங் சிறைச்சாலையின் முன்வாசலில் இருந்து இச்செய்தியை அம்பலப்படுத்தினார்.
பத்துகாஜா சிறைச்சாலையிலிருந்து தடுப்புக்காவல் கைதிகளாக கொண்டுவரப்பட்ட இவர்களை மனிதநேய உரிமைக்கு புறம்பாக சுமார் 50 அல்லது 60 வாடன்கள் தாக்கியதாக, நீதிமன்றத்திற்கு வந்த ஒரு கைதியின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவலாகும். இத்தகவல் குடும்ப உறுப்பினரிடம் பகிரப்பட்டு பின் மற்றவர்களிடமும் தெரியப்படுத்தப்பட்டதாக அவர் மனவேதனையுடன் கூறினார்.
இவர்கள் அனைவரையும் எந்தவொரு காரணமின்றி தாக்கப்பட்டுள்ளனர். அவ்வேளையில் அனைத்து கைதிகளும் தரையில் படுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் இந்நாட்டிலுள்ள கொடூர சம்பவமாக கருதப்படுகிறது. இந்த கைதிகள் அனைவரும் இன்னமும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படாதவர்கள். அப்படியிருக்கும் வேளையில் இந்த வாடன்களுக்கு யார் அதிகாரம் வழங்கினார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மலேசிய பிரதமர் மற்றும் மலேசிய உள்நாட்டுத்துறை அமைச்சர் இவ்விவகாரம் குறித்து நேர்மையான விசாரணை செய்து அவர்களது குடும்பத்திற்கு நீதி வழங்க முற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சட்டத்திற்கு புறம்பாக கைதிகள் தாக்கப்பட்ட செயலை என்னவென்று கூறுவது. சிறைச்சாலையில் என்ன நடந்தது என்று தைப்பிங் சிறைச்சாலை நிர்வாகத்தினர் எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியிட வில்லை. இச்சம்பவம் இம்மாதம் 17 ல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என்று உரிமைக்கட்சியின் துணைத்தலைவர் டேவிட் மாரஷல் கூறினார்.
சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள். அப்படியிருக்கும் வேளையில் மிருகத்தனமாக கைதிகளை தாக்கி காயப்படுத்தி கொள்வதை என்னவென்று கூறுவது.இதுதான் மனிதநேயமா?
காயம் அடைந்த கைதிகளை சிகிச்சை பெற மருத்துவமனை செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இந்நாட்டு சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? உள்நாட்டு அமைச்சரின் நிலைப்பாடு என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.



