
ஜொகூர், தங்காக் பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை சிறப்பான முறையில் நடந்தேறியது.
தங்காக்,ஏப்.29-
ஜொகூர், தங்காக் பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஜோபா திணை மன்ற உயிர்மை பள்ளி திட்டத்தின் கீழ் பன்முகத்தன்மைக் கொண்ட கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமசாமி, நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், படிநிலை 1 மற்றும் படிநிலை 2 மாணவர்களும் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்
இதில் தமிழ்நாட்டிலிருந்து திணை மன்ற உறுப்பினர்களான, தமிழ் கலை இலக்கிய வல்லுநர், முனைவர் அழகு அன்னாவி, நாடக கலை நிபுணர் டிராமா செல்வம், இவர்களோடு இணைந்து நம் நாட்டின் IAB-யின் முன்னாள் நனி சிறந்த விரிவுரையாளர் திரு மனோகரன் முத்துசாமி அவர்களும் பன்முகத்தன்மைக் கொண்ட கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை வழிநடத்தினர்.
இதனுடன் ஆசிரியர்களுக்கான பணித்திறக் கற்றல் குமுகம் ஒன்றும் நடத்தப்பட்டது. அதில் வகுப்பறையை அரங்கமாக்குதல் வழி மொழி கற்பித்தல் மற்றும் கற்றலில் இனிமை தொடர்பாகப் பயிற்சிப் பட்டறையும் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் தங்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின் வழி மாணவர்களைத் தம் வசமாக்கும் உத்திகளையும் அறிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
மாணவர்களுக்கு இயல், இசை, நாடகம் மூலமாகவும் அவர்களின் உயர்நிலைச் சிந்தனையாற்றலை அமலாக்க முடியும் என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை அமைந்திருந்தது.
மேலும் இவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மலேசியக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அதுமட்டுமின்றி நிகழ்வின் முத்தாய்ப்பாக பாட இறுதியில் மாணவர்கள் கட்டொழுங்கு, உணவுமுறை, பண்பாடு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாடக வடிவில் படைக்கப்பட்டது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்தது.
இறுதியாக தலைமையாசிரியர் உரையாற்றுகையில் உயர்நிலைச் சிந்தனைத் திறன் அமலாக்கத்தில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது என்றார்.
மேலும் விளைப் பயன்மிக்க கற்றல் கற்பித்தலில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும், அவர்களை மையப்படுத்தும் பலதரப்பட்ட நடவடிக்கைகளைக் கையாளும் பன்முகத்தன்மை மிக்கவர்களாக ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்த இன்றைய நிகழ்ச்சி தூண்டுகோலாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த ஜோபா திணை மன்ற உயிர்மை பள்ளி திட்டத்தின் நிபுணர்களுக்குத் தங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய துணைத்தலைமையாசிரியர்கள், திருமதி கு. லெச்சுமி, திருமதி ம. ஆனந்தி மற்றும் திரு சு. யோகாநந்தன் அவர்களையும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



