
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு கோலாகலமாக தொடங்கியது டத்தோஸ்ரீ எம் சரவணன் பங்கேற்பு
சென்னை, மே 3-
ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்ப் பேராயம் ஆகியவை இணைந்து நடத்தும், ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங் கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இம்மாநாடு, சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியங்கள் வரை சித்தாந்த பதிவுகள் என்ற தலைப்பில் நடக்கிறது. இன்று காலை 8:30 மணிக்கு மங்கள இசையுடன் மாநாடு தொடங்கியது. தொடக்க விழாவுக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகித்தார் .

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், 27ஆவது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கினார்.
மலேசியா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா, சைவ சித்தாந்த நுால் தொகுப்பை பெற்று வாழ்த்துரை வழங்கினார் .
குன்றக்குடி ஆதீனம், 46ஆவது குரு மகா சன்னிதானம் பொன்னம்பல அடிகளார், சைவ சித்தாந்த வினா – விடை நுாலை வெளியிட்டு, அருளாசி வழங்கினார்.
மாநாட்டில் ஆய்வரங்கம், நுால் வெளியிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இவற்றில் பல்வேறு ஆதீனங்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிறைவு நாளான 5ஆம் தேதி மதியம், கருத்தரங்க மலர் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மாநாட்டில், 75 நுால்கள் வெளியிடப்பட உள்ளன.
ம.இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், கதிரேசன், செயலாளர் சேதுபதி, வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



