
ஆசியான் 2045 இலக்கை நோக்கி மலேசியாவின் தலைமையிலான புதிய அத்தியாயம்
கோலாலம்பூர் மே 27- 46வது ஆசியான் உச்சி மாநாட்டில் (46th ASEAN Summit) “ஆசியான் 2045 நமது பகிரப்பட்ட எதிர்காலம்”குறித்த கோலாலம்பூர் பிரகடனம் ஆசியான் தலைவர்களால் கையெழுத்திடப்பட்டது.
இப்பிரகடனம் உருவாவதில் மலேசியா முக்கியப் பங்காற்றியது குறித்து பெருமிதம் கொள்வதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியப் பிரதமர் தமது உரையில் இந்தப் பிரகடனம் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆழப்படுத்தவும், சமமான செழுமையை நிலைநிறுத்தவும், மேலும் ஒன்றிணைந்த, நெகிழ்வான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆசியான் எதிர்காலத்தை உருவாக்கவும் உள்ள கூட்டு உறுதியைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
இந்தப் பிரகடனத்தின் மூலம், ஆசியான் மாற்றத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அதனை வழிநடத்தவும் உறுதிபூண்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் பசுமை, நீலப் பொருளாதாரங்கள் போன்ற துறைகளில் ஆசியான் முன்னணியில் நிற்கப் போவதற்கான தெளிவான சமிக்ஞை இது.
மனித ஆற்றலை மேம்படுத்துவதன் மூலமும், வளர்ச்சி இடைவெளிகளைக் குறைப்பதன் மூலமும், இப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும் நிலையான வளர்ச்சியை உருவாக்குவதன் அவசியத்தையும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், சுட்டிக் காட்டினார்.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் ஸ்திரத்தன்மை
பெருகி வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற காலங்களில், கோலாலம்பூர் பிரகடனம் ஆசியான் உறுப்பு நாடுகளின் கூட்டு உறுதியைப் பிரதிபலிக்கிறது.
இது பிராந்தியத்தை ஸ்திரத்தன்மைக்கு ஒரு தூணாகவும், நன்மைக்கான சக்தியாகவும் நிலைநிறுத்துகிறது.
“புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ச்சிப் பாதையில் நாம் உயரப் பறந்தாலும், முன்னேற்றம் நீதி மற்றும் சமூக நலனைப் பலியிடாமல் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும்” என்று மலேசியப் பிரதமர் வலியுறுத்தினார்.
எதிர்காலத் தலைமுறைகளுக்கான உறுதிமொழி ஆசியான் 2045 தொலைநோக்குப் பார்வை என்பது எதிர்காலத் தலைமுறையினருக்கான ஒரு உறுதிமொழியாகும். இப்பிராந்தியத்தின் எதிர்காலம் நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.
இந்த முயற்சி ஆசியானை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பெருமையின் ஆதாரமாக அமையும் என்று மலேசியப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.



