
பத்துமலை தைப்பூசத்தில் கலந்து கொள்ள பிரதமர் அன்வாருக்கு அழைப்பு தான்ஸ்ரீ ஆர்.நடராஜா தகவல்
பத்துமலை தைப்பூசத்தில் கலந்து கொள்ள பிரதமர் அன்வாருக்கு அழைப்பு தான்ஸ்ரீ ஆர்.நடராஜா தகவல்
கோலாலம்பூர்:
பத்துமலையில் 133ஆவது தைப்பூச விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தைப்பூச விழாவில் கலந்துக் கொள்ள வருமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.
பிரதமர் தரப்பில் இருந்து பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
.ஜனவரி 23ஆம் தேதி வெள்ளி ரத ஊர்வலத்துடன் பத்துமலை தைப்பூச விழா தொடங்கவுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தற்போது முன்கூட்டியே நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இவ்விழாவில் கலந்து கொள்வார் என நாங்கள் நம்புகிறோம்.
பிரதமரை தவிர்த்து மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, அமைச்சர்கள், துணையமைச்சர்கள் உட்பட பல பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
இதனிடையே பத்துமலையின் மேல் குகைக்கு செல்ல மின் மடிக்கட்டு நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட திட்டம் குறித்த வரைப்படம் உட்பட அனைத்து ஆவணங்களும் அதற்கான அனுமதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பத்துமலைக்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக்கிடம் இது குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இது குறித்து அறிவிப்புகளை செய்வார் என தேவஸ்தானம் நம்புகிறது என்று டான்ஸ்ரீ நடராஜா மேலும் சொன்னார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்




