
ஜாபர் சாதிக்கை பார்த்ததுகூட கிடையாது வசந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் மீது சட்டநடவடிக்கை டத்தோ அப்துல் மாலிக் போலீசில் புகார்
கோலாலம்பூர், மார்ச் 14-
இதுவரையில் ஜாபர் சாதிக்கை இதுவரை பார்த்ததுகூட இல்லை என்பதால் அவருடன் இணைத்து பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று மாஙிக் ஸ்டீம்ஸ் காப்பரேசன் நிறுவன தோற்றுநர் டத்தோ அப்துல் மாலிக் காணொளி வழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களையும் வதந்திகளையும் பரப்பும் நபர்களுக்கு எதிராக டத்தோ அப்துல் மாலிக் டாங் வாங்கி காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
இந்தியாவில் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த சர்வதேச அளவில் போதை பொருட்களைக் கடத்தி வந்ததாக இந்திய போலீசாரால் தகவல் கூறப்பட்ட தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜாபர் சாதிக் இந்திய மத்தியப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் தலைவர் மலேசியர் எனவும் மலேசியாவில் மிகப்பெரிய மாபியா என்றும் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பேசிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் டத்தோ அப்துல் மாலிக்கை இதில் சம்பந்தப்படுத்தி பொறுப்பில்லாத சில தரப்பினர் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். இது ஒரு கடுமையான செயலாகும் என்றும் இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ அப்துல் மாலிக் அந்த காணொளியில் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறை முனைப்பு காட்ட வேண்டும் என்று தமது வழக்கறிஞர் டேவிட் குருபாதத்துடன் காணொளி ஒன்றில் பேசிய டத்தோ அப்துல் மாலிக் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
மலேசியாவின் முதன்மை தொழிலதிபராகவும் திரைப்பட விநியோகஸ்தராகவும் பணி செய்து வரும் தமது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ஒரு முயற்சி இது என்று டத்தோ அப்துல் மாலிக் கண்டனம் தெரிவித்தார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



