Malaysia

சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு மூடும் அபாய கட்டத்தை கடந்துள்ளது

ரவூப், மார்ச் 19-
சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கல்வி ஆண்டில் பினாங்கு, காராக் ஆகிய பகுதிகளிலிருந்து 9 மாணவர்கள் மாற்றலாகி வந்திருப்பதன் வழி, இப்பள்ளியின் மாணவர் பதிவில் முன்னேற்றம் காணப்படுகிறது.

30 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் பன்மை வகுப்புகள் உருவாகும் சூழல் இருந்து வருகின்ற நிலையில், கணிசமான மாணவர் சேர்க்கை அதிகரிப்பினால் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி அந்த அபாயக் கட்டத்தைக் கடந்துள்ளது.

பினாங்கு மாநிலத்திலிருந்து நிறுவன மேலாளராக பதவி உயர்வு பெற்று ரவூப் மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்திருக்கும் காளிதாஸ், தனது 4 பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

முன்னதாக, தனது இரு பிள்ளைகளை தேசியப் பள்ளியில் சேர்க்கலாம் என முடிவு செய்திருந்த அவர், பள்ளியின் தலைமையாசிரியர் இல.கருணாநிதி வழங்கிய மிகத் தெளிவான ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, பின்னர் இரு பிள்ளைகளையும் தனது மற்ற இரு பிள்ளைகளோடு சேர்த்து இப்பள்ளியில் பதிவு செய்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து, சமூகச் சேவையாளரும் தொழில்முனைவருமான ஐ.சண்முகநாதன், தனது 4 பிள்ளைகளை காராக் தமிழ்ப்பள்ளியிலிருந்து மாற்றி, தான் கல்வி பயின்ற அதே சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ்ப்பள்ளி மீது, அதிலும், குறிப்பாக தனக்கு கல்வி அறிவு புகட்டிய அதே தோட்டத் தமிழ்ப்பள்ளியில் என் பிள்ளைக்ளையும் சேர்த்ததில் மன நிறைவு அடைவதாக ஐ.சண்முகநாதன் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ரவூப் பட்டணத்திலுள்ள சீனப் பள்ளியிலிருந்தும் ஒரு மாணவர் மாற்றலாகி சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்திருக்கிறார். பாலர்பள்ளியிலும் கூடுதலாக ஒரு மாணவர் இணைந்திருக்கிறார்.

மாணவர்களின் நலன் மீது அதீத அக்கறை கொண்டுள்ள ஆசிரியர் பெருந்தகையினரின் பெருமுயற்சியால், இப்பள்ளி மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர்; பல போட்டிகளிலும் பங்கேற்று முதன்மை பரிசுகளை வென்றுள்ளனர். மேலும், மிகச் சிறந்த தணிக்கைக்குமான விருதுகளையும் இப்பள்ளி பல முறை வென்றுள்ளது.

கல்வி புறப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பாற்றப்பட்டு, மனிதநேய ஒருமைப்பாட்டுரிமையை மாணவர்களிடத்தில் வளர்க்கும் பொருட்டு, திருஅருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் வாழ்வியல் நெறிமுறைகளும் இப்பள்ளியில் வாரந்தோறும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

பள்ளி வளர்ச்சிக்கும் மாணவர் மேன்மைக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், சுற்றுவட்டார ஆலயங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு சாரா அமைப்பின் தலைவர்கள், சமூகச் சேவையாளர்கள், வணிகர்கள் என பல நல்லுள்ளங்கள் இப்பள்ளி மீது அக்கறை கொண்டிருப்பதால் தங்களால் இன்னும் உற்சாக பணியாற்ற முடிகிறது என தலைமையாசிரியர் இல.கருணாநிதி தெரிவித்தார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button