
கோல குபு பாரு இடைத்தேர்தல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை மட்டும் நம்புங்கள் டத்தோ ஆர்.ரமணன் வேண்டுகோள்
சுங்கைபூலோ, ஏப், 29-
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை மட்டும் மக்கள் நம்ப வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் அதிகமாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனை வெளியிடுபவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள் இல்லை. முகநூல், டிக்டாக் வாயிலாக வெளியிடப்படும் செய்திகளில் நண்பகத்தன்மை இல்லை. ஆகையால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாளிதழ்கள், இணைய ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளை மட்டும் மக்கள் நம்ப வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.
இந்த சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மையானதா என்பதை இந்திய சமுகம் முதலில் ஆராய வேண்டும். ஏனெனில் சமூக ஊடகங்களில் வெளிவரும் பெரும்பாலான செய்திகள் அவதூறாக உள்ளது என்றார் டத்தோ ரமணன்.
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது. இது சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் இந்திய சமூகத்திற்கு மிகவும் முக்கியமான தேர்தலாக விளங்குகிறது. ஆகவே இந்த தேர்தலில் இந்திய சமூகம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சுங்கை பூலோவில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புக்கு பின் செய்தியாளர்களிடம் டத்தோ ரமணன் அவ்வாறு கூறினார்.
இதனிடையே சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ ரமணன் நடத்திய நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
பெருநாள் காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்நிகழ்வு அமானா இக்தியாருடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் முக்கிய அங்கமாக சுங்கைபூலோ சுற்றுவட்டாரத்தில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் 150 பேருக்கு உதவி நிதிகள் வழங்கப்பட்டன
அதே போன்று நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கு பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று டத்தோ ரமணன் கூறினார்.
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



