
ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது; விரைவில் பள்ளி கட்டப்படும்: பாப்பாராயுடு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
சுங்கைபூலோ,ஜூன் 26-
பல்வேறு பிரச்சினைகளால் சூழ்ந்திருந்த சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ. தோட்டத் தமிழ்பள்ளி நிலம் இழுபறியாக இருந்த நிலையில் தற்போது பிரச்சினைகள் களையப்பட்டு 6 ஏக்கர் நிலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.
சுங்கைபூலோ ஆர்.ஆர்.ஐ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்காக ஏற்பாடுகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி நிர்வாகம் வாரியம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் என்று பாப்பாராயுடு தெரிவித்தார்.
ஆர்ஆர்ஐ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக மாற்று நிலம் கடந்த 2022ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கு நிலம் கிடைத்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இப்பிரச்சினை தொடர்ந்து இழுப்பறியாக இருந்தது. இதில் வேறு நிலமும் அடையாளம் காணப்பட்டதாக பாப்பாராயுடு சொன்னார்.
இந்நிலையில் தற்போது இந்த பிரச்சினைகள் சுமூகமான தீர்வு காணப்பட்டது. ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலம் முறையாக கெசட் எனும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி யாரும் வேறு நிலம் குறித்து பேச முடியாது என்று பாப்பாராயுடு குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி நிர்வாகமும் பள்ளி கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதன்வழி இத்தமிழ்ப்பள்ளி விரைவில் கட்டப்படும் என்று நம்புவதாக பாப்பாராயுடு தெரிவித்தார்.
ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுவில் ஒரு சில பிரச்சினைகள் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதன்பிறகு புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு கூறினார்.



