
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமை மாணவர்கள் பொறுப்பேற்பு
கோலாலம்பூர்,ஜூலை 5-
‘சீருடை அணிந்து சிறப்புப் பணி செய்’, எனும் கருப்பொருளோடு கடந்த ஜூலை 2ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் மாணவர் நலப்பிரிவின் கீழ் ஏற்கனவே திட்டமிட்டப்படி தலைமை மாணவர்களுக்கான பதவி நியமனமும் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் குமாரி கமலேஸ்வரி கிருஷ்ணசாமி, கருவள மைய ஆசிரியர் திருமதி புனிதவள்ளி முனீஸ்வரன் மற்றும் நெறிவுரைஞர் குமாரி வித்யா தியாகராஜா ஆகியோரின் கூட்டு உழைப்பில் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
எந்த ஆண்டும் இல்லாத குதூகலமும் கோலாகலமும் இந்நிகழ்ச்சியில் நிறைந்திருந்தது.
மாணவி துர்காஷினியின் இறை வாழ்த்தோடு இனிதே தொடங்கியது. தேசியப் பண் , மாநிலப் பண் மற்றும் பள்ளிப் பண் தொடர்ந்து இசைக்கப்பட்டது.
பள்ளியின் மாணவர் நலத் துணைத்தலைமையாசிரியர் திருவாளர்
விக்டர் ஆசீர்வாதம் PPN, PIK வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையின் போது சிறப்பான ஏற்பாட்டினை செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து, திறப்புரையாற்றி இன்றைய நிகழ்ச்சியினை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன்.
இதில் உரையாற்றிய அவர் மாணவர்களின் ஆரம்பக் கல்வி வாழ்க்கையையும் கடமையாற்றும் போது தலைமை மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் எடுத்துரைத்தார்.
தலைமை மாணவர்களின் பொறுப்புகளையும் அவுர்களின் கட்டொழுங்கினைக் காத்திட உதவிட வேண்டிய முக்கியத்துவத்தையும் தெரிவித்தார்.
இவ்வாறான கம்பீரமான மற்றும் தன்முனைப்பு ஊட்டும் உரையினால் இன்றைய நிகழ்ச்சி வண்ணமயமாகவும் விறுவிறுப்பாகவும் களைக்கட்டியது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் கதாநாயகர்களான ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரையிலான தலைமை பொறுப்பேற்கவிருக்கும் மாணவர்கள் தத்தம் பொறுப்புகளுக்கேற்ற சீருடையில் குழுமியிருந்தது கண்கவர் காட்சியாய் அமைந்திருந்தது.
மாணவர்களுக்குப் பதவி நியமன சான்றிதழ்கள் அவரவர் வகிக்கும் பொறுப்புகளுக்கு ஏற்ப பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர்கள் முறையே எடுத்து வழங்கினர்.
அதன் பின், தலைமை பொறுப்பேற்ற மாணவர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து தலைமை மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற எல்லாம் வகையிலும் உதவிகள் புரிந்த பள்ளியின் அறங்காவலர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் R.நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம்,முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களும் எந்நேரமும் பக்கபலமாய் இருப்பதாக தலைமையாசிரியை திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன் உறுதியாகக் கூறினார்.



