
21ஆம் ஆண்டை நோக்கி ஜெயபக்தி குயிலின் புத்தகத் திருவிழா ஜெயபக்தி குயிலின் புத்தக கண்காட்சி ஜூலை 15 தொடங்கி ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறும்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
படம்: ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூலை 15-
மலேசிய மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேலோங்கச் செய்து அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஜெயபக்தி குயிலின் புத்தக கண்காட்சி ஜூலை 15 தொடங்கி ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளதாக
ஜெயபக்தி பதிப்பகத்தின் தோற்றுனரும் குயில் ஆசிரியருமான டத்தோ டாக்டர் கு செல்வராஜூ கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் நாடு தழுவிய அளவில் ஜெயபக்தி குயிலின் மாபெரும் மலேசிய-இந்திய புத்தகக் கண்காட்சி மிக விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் இவ்வாண்டு 21ஆம் ஆண்டாக இப்புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் டத்தோ செல்வராஜூ தெரிவித்தார்.
‘ஜூலை மாதம் வாசிப்பு மாதம்’ என்பதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. “மலேசிய மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேலோங்கச் செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். கடந்த 2000ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்ட இப்புத்தகக் கண்காட்சி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நாடு தளவிய அளவில் நடைபெற்று வந்துள்ளதாக டத்தோ கு.செல்வராஜூ சொன்னார்.
தொடக்கத்தில் 6 இடங்களிலும் மட்டுமே தொடங்கப்பட்ட இக்கண்காட்சி பொதுமக்களின் மிகுந்த ஆதரவினால் ஜொகூர் பாரு தொடங்கி பெர்லிஸ் மாநிலம் வரையிலும், பகாங் மாநிலத்திலும் சுமார் 30 இடங்களில் இப்புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் நான்கு ஆண்டுகளாக கோவிட் 19 காரணமாக கோலாலம்பூர் ஜெயபக்தியில் மட்டும் இக்கண்காட்சி நடத்தப்பட்டது.
மக்களின் தேவை உணர்ந்து இயங்கலை வாயிலாக நாங்கள் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கவும் வகைசெய்திருந்தோம். இதனால் வீட்டிலிருந்தவாறே மக்களின் புத்தகத் தேவையைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது.
இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் வீட்டிலிருந்து கொண்டே கையடக்கக் கருவிகளில் நாம் வாசிக்க முடிந்தாலும், புத்தகத்தைத் தொட்டுப் புரட்டிப் பார்க்கும் மனமகிழ்ச்சி அதில் கிடைப்பதில்லை என்பதே உண்மை என்றார் டத்தோ கு.செல்வராஜூ.
புத்தகங்களை நேரடியாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்குவதில் உள்ள ஆத்ம திருப்தி இயங்கலை வாயிலாக தேர்ந்தெடுத்து வாங்குவதில் இல்லை என்பதை வாசகர்கள் எங்களிடம் ஒரு குறையாகவே கூறி வந்தனர். எனவே, வாசகர்களின் மனக்குறையைத் தீர்ப்பதற்காகவே கடந்த மூன்றாண்டுகள் போலவே. இவ்வாண்டும் இப்புத்தகக் கண்காட்சியை ஜெயபக்தி ஏற்பாடு செய்துள்ளது.
நாடு தளவிய அளவில் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றாலும் அருகாமையில் உள்ள மக்கள் வந்து, பார்த்து, வாங்கும் பொருட்டு ஜெயபக்தியில் மட்டுமாவது இக்கண்காட்சியை ஏற்பாடு செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளதை எண்ணி மன திருப்தி கொள்வதாக டத்தோ கு.செல்வராஜூ கூறினார்.
இதுவரை எங்கும் பார்த்திராத கேள்விப்பட்டிராத பல புதிய புத்தகங்களைப் பார்க்கும் வாய்ப்பு இப்புத்தகப் பெருவிழாவில் வாசகர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் தற்சமயம் இப்புத்தகங்களை வாங்குவதற்கு இயலாவிடிலும் வாசகர்கள் தங்கள் வருகையை உறுதி செய்து அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மலேசிய, இந்தியா மட்டுமல்லாமல் இதர நாடுகளிலிருந்தும் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம். இலக்கண, இலக்கியம் கதை, கட்டுரை கவிதை நாவல்கள் சமையல், ஆன்மிகம் விளையாட்டு, தவ்முனைப்பு. இல்லறம் பாடப்பயிற்சிப் புத்தகங்கள் என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இப்புத்தகப் பெருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மட்டுமல்லாது மலாய், ஆங்கில மொழிகளிலும் வாசகர்களுக்கு வதுவாக பல புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன
உங்களது ஆதரவு எங்களுக்குக் கிடைக்குமானால் இப்புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் நடத்தும் உத்வேகம் எங்களுக்குக் கிடைக்கும். மேலும் எதிர்வரும் ஆலஸ்ட் 14ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இப்புத்தக் கண்காட்சியில் 8% வரையிலான சிறப்பு கழிவுகளுடன் புத்தகங்களை வாங்கும் அரிய வாய்ப்பினை ஜெயபக்தி உங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. இதுவரை நீங்கள் எங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவையும் அன்பையும் வழங்கி வந்துள்ளீர்கள். தாய்மொழியை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
இம்மாபெரும் புத்தகப் பெருவிழாவிற்கு உங்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்ப்பதாக டத்தோ கு.செல்வராஜூ மேலும் சொன்னார்.



