
சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குங்கள் டத்தோஸ்ரீ சரவணன் கோரிக்கை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூலை 27-
இந்திய சமுதாயம்
சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கும்
சாதிக்கும் பெண்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய பெண்களின் சாதனை குறித்து நாம் அனைவரும் பெருமையாக பேசி வரும் நிலையில்
இச்சாதனையை படைக்க அவர்கள் கடந்து வந்த சோதனை என்ன? இழந்த விஷயங்கள் என்ன என்று யாருக்கும் தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் யாரும் விரும்புவதும் இல்லை என்று ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற சாதனை பெண்கள் விருது விழாவில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.
இந்நிலையில் சாதனை படைத்தவர்களை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களே அதற்கு முக்கியப் பங்காற்றும்.
அதுவும் அப்பெண்ணையும் அப்பெண்ணின், குடும்பத்தாரையும் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். நாட்டில் சாதிக்கும் இந்திய பெண்களை வீழ்த்தவே டிக்டாக் போன்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் நோக்கமே பெண்களை கௌரவிப்பதுதான். மலேசியாவில் பல துறைகளில் சாதனை படைத்து வரும் இந்தியப் பெண்களுக்கு தமிழ்நாடு திருச்சியில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சாதனையை கௌரவிக்கும் நோக்கில் மஇகா இன்றைய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த எம்எஸ்கேவின் தலைமை இயக்குநர் செல்வமேரியை பாராட்டுவதோடு விருது பெற்ற 10 சாதனை பெண்களுக்கு டத்தோஸ்ரீ சரவணன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



