
ம.இ.கா சரியான தலைமைத்துவத்தை கொண்டுள்ளது பகாங் மாநில ம.இ.காவில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் புகழாரம்
பெந்தோங்,ஆக.12-
துன் சாமிவேலுவுக்குப் பிறகு ம.இ.கா சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறது என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறினார்.
மஇகா வலுவான கட்சி என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் நிரூபித்து வருகிறோம்.
தலைவர் என்பது பெயர், தலைமைத்துவம் என்பது செயல். இன்றைக்கு துன் சாமிவேலு அவர்களுக்குப் பின் மஇகாவில் சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறோம் என்று பகாங் மாநில மஇகாவின் 78ஆவது பேராளர் மாநாட்டைக் கட்சியின் தேசியத் தலைவர் சார்பாக தொடக்கி வைத்த போது
டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் கட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
கிளைகளை வலுப்படுத்தி கட்சியைப் பலமான கட்சியாக உருவாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
இன்றைக்கு இந்திய சமுதாயம், குடும்பத்தில் ஒரு பட்டதாரி எனும் நிலையைத் தாண்டி, ஒவ்வொரு குடும்பத்திலும் நிபுணர்களை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அவர்களுக்குக் கை கொடுக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் புரிய வைத்து கட்சியை வலுப்படுத்துவோம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன கேட்டுக் கொண்டார்.
பெந்தோங்கில் உறுப்பினர்களின் பேராதரவோடு ம.இ.கா மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



