
செந்தூல் ஸ்ரீ நாகம்மா ஆலய நிர்வாகத்திற்குத் தெரியாமல் ஆலயம் கட்டுவதா? ஆலயச் செயலாளர் ஹரி சாடினார்
கோலாலம்பூர், ஆக.20-
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மா
கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கோயில் நிர்வாகத்திற்கு தெரியாமலேயே மேம்பாட்டு நிறுவனம் தனது தொழிலாளர்களை வைத்து கோவிலை கட்டிக் கொண்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்று ஆலய செயலாளர் ஹரி சாடியுள்ளார்.
நாங்கள் பல போராட்டத்திற்கு மத்தியில் புதிய இடத்திற்கு மாறிச்செல்ல முடிவு செய்திருக்கிறோம். ஆனால், செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மா கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மேம்பாட்டு நிறுவனம் சொந்தமாக கோவிலை கட்டிக் கொண்டிருப்பது புரியாத புதிராக என்று ஆலய செயலாளர் ஹரி தெரிவித்தார்.
மேம்பாட்டு நிறுவனத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
மேம்பாட்டு நிறுவனம் நேரடியாக முன் வந்து கோயில் கட்டுவது தொடர்பில் கோயில் நிர்வாகத்திடம் கலந்து பேசி இருக்க வேண்டும்.
ஆனால், கோயில் நிர்வாகத்திற்கு தெரியாமலேயே கோயிலை கட்டுவது கண்டிக்கத்தக்கது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே. இராமலிங்கம் சொன்னார்.
ஒரு கோவிலை கட்டுவது என்றால் ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓதி கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே தெரியாமல் மேம்பாட்டு நிறுவனம் அவசரப்பட்டு ஆட்டு கொட்டகை போல் கோயில் கட்டுவது ஏன் என்று டத்தோ ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதாக டத்தோ ராமலிங்கம் தெரிவித்தார்.



