
பத்துமலைக்கு இன்று வரலாற்றுப்பூர்வ நாள் இந்திய கலாச்சார மையம் இந்தியர் பெருமை சொல்லும் டத்தோஸ்ரீ சரவணன் பெருமிதம்
பத்துமலை,ஜன.19-
பத்துமலைக்கு வருபவர்களுக்கு நமது கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்கு இந்த கலாச்சார மையம் முக்கிய பங்காற்றும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
தனக்கு என்ன தடைகள் வந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்காமல் துடிப்போடு செயல்பட்டு பல திட்டங்களை வெற்றி கரமாக செய்து வரும் தான்ஸ்ரீ நடராஜா, பத்துமலையை மலேசியாவின் அடையாளமாக உயர்த்திய பெருமை அவரையே சாரும் என்று டத்தோஸ்ரீ சரவணன் பாராட்டி வாழ்த்தினார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், மஹிமா, டிஎஸ்கே குழுவினர் சார்பில் பொங்கல் தமிழர் திருநாள் நிகழ்வுகள் பத்துமலையில் விமரிசையாக நடைபெற்றது.
200 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டதோடு நமது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் இதில் இடம்பெற்றது.
மஹிமாவின் தலைவர் டத்தோ சிவக்குமார் இந்த நிகழ்வுகளுக்கு தலைமையேற்று அதை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
நாட்டில் உள்ள ஆலயங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் மஹிமா மூலம் அவர் பல திட்டங்களை மேற்கோண்டு வருகிறார். டிஎஸ்கே குழுவின் சார்பில் சமயம், கலை, கலாச்சார நிகழ்வுகளையும் டத்தோ சிவக்குமார் நடத்தி வருகிறார். அவருக்கு டத்தோஸ்ரீ சரவணன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்திய கலாச்சார மையம், பொங்கல், தமிழர் திருநாள் என்று பத்துமலையில் பல நிகழ்வுகள் நடைபெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பத்துமலை இந்திய கலாச்சார மையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
இந்திய கலாச்சார மையத்தை ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



