
தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை மனு
ஈப்போ, அக்.1- ஜாலான் பெண்டாஹாராவில் 8 வது ஆண்டாக, பழம்பொருள் வணிகர் சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. இக்கூட்டத்தில் வருமானத்துறை வாரியத்தின் ” இ- இன்வாயிஸ்” பற்றிய விளக்கம் இச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஈப்போ பழம்பொருள் வணிகர் சங்கத்தின் துணைத்தலைவர் சத்தியகுமார் இராமச்சந்திரன் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை குறித்து தீர்வு காண கோரிக்கை மனு செய்து வந்துள்ளோம். இவ்விவகாரம் குறித்து மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கம் வரை முறையிட்டோம். ஆனால், இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்று அவர் வருத்தமாக கூறினார்.
இந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினையால் எங்களது வியாபாரம் சுணக்கம் கண்டதோடு, தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல இயலவில்லை. அன்றைய மற்றும் இன்றைய மனிதவள அமைச்சரிடம் அந்நிய தொழிலாளர்கள் தேவையை , அவசியத்தை தெரியப்படுத்தி விட்டோம். இருப்பினும், இவ்விவகாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை எங்களை தவிர்த்து இதர சங்களான “மித்தா” மற்றும் “நீரா” பழம்பொருள் வணிக சங்கத்தினர்களுக்கு 3000 தொழிலாளர்கள் தேவைப்படுகிறது. எங்கள் தொழில் “சேவை” அடிப்படையில் உள்ளதால் புறக்கணிக்ககூடும். ஆனால், உற்பத்தி திறன் தொழில்துறைக்கு அந்நிய நாட்டு தொழிலாளர்களை தருவிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எங்களது பழம்பொருள் வணிகர் சங்கத்தினர் கல்வித்துறைக்கு முக்கியதுவமும், முன்னுரிமையும் வழங்கி வருகிறோம். குறிப்பாக, இங்குள்ள 24 மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு, 10 ரிங்கிட்டை கட்டணமாக வசூலித்து இதன் மொத்த செலவை ஏற்று செயல்படுத்தி வருகிறோம். இங்கு படித்த மாணவர்கள் பின் தங்கள் உயர்கல்வியை பல்கலைக்கழகம் மற்றும் இதர உயர்கல்வி நிலையங்களில் தொடர்ந்து வருகின்றனர். இங்கு பணிஓய்வு பெற்ற நல்ல பட்டறிவு கொண்ட ஆசிரியர்கள் போதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பத்தாவது ஆண்டு நிறைவுக்குள் எங்கள் சங்கத்தினர் புதிய கட்டடம் ஒன்றை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆலோசனைகளை சங்க உறுப்பினர்கள் வழங்கி வருகின்றனர். கட்டட நிதி திரட்டும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இரா.சத்தியகுமார் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்நிகழ்வில் இச்சங்க்தின் 78 உறுப்பினர்கள் மற்றும் 12 இதர பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். இச்சங்கம் தலைவர் கா. பிரகாஷ் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. இவ்வேளையில் எங்களுக்கு உதவி வரும் காவல்துறை, ஈப்போ மாநகர் மன்றம், பேராக் மாநில அரசுவிற்கும் மற்றும் எங்கள் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து நன்கொடையாளர்கள் , நல்லுள்ளங்களுக்கு இச்சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.



