இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க போதிய அதிகாரிகள் இருக்கிறார்களா? சண்முகம் பொய்யுரை வேண்டாம்! ஆதாரத்தைக் காட்டும்படி சிவசுப்பிரமணியன் சவால்
கோலாலம்பூர், செப்.30-
மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைக் களைய பிரதமர் துறை உட்பட அரசு அலுவலகங்களில் போதிய அதிகாரிகளும் ஊழையர்களும் இருப்பதாக பிரதமரின் இந்திய சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்துள்ள கருத்தை மஇகா மத்திய செயலவை உறுப்பினர் இலெ.சிவசுப்பிரமணியன் மறுத்துள்ளார்.
இந்திய சமுதாயத்திற்காக குரல்கொடுக்க ஒரு தமிழ் அமைச்சர் இன்றைய அமைச்சரவையில் இல்லை. இந்த நிலையில் மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக-கல்வி-பொருளாதார-சுகாதார சிக்கல் தொடர்பான சிக்கலைத் தீர்க்க போதுமான இந்திய அதிகாரிகள் இல்லை என்று அண்மைக் காலமாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு சண்முகம் மூக்கன் விளக்கம் அளித்துள்ளார
பிரதமர் துறையில் போதுமான இந்திய அதிகாரிகளும் பணியாளர்களும் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள மூ.சண்முகத்தின் கூற்று உண்மை யென்றால், இவரின் அலுவலத்தில் இருக்கும் மூன்று பேரைத் தவிர, வேறு எந்தெந்த துறைகளில் இந்தியர்கள் அதிகாரிகளாகவும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இந்திய சமுதாயத்திற்கு தெரிவிக்க முடியுமா என்றும் அதற்கான ஆதாரத்தைக் காட்டமுடியுமா என்றும் வினாக் கணைகளைத் தொடுத்துள்ள சிவசுப்பிரமணியம், சண்முகத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
இந்தியர்கள், அரசு அலுவலகங்களை நாடுவதில் இடைவெளி நிலவுகிறது; தங்கள் பிரச்சினைகளை செவிமடுப்பதற்காக அதிகாரிகள் முன்வருவதில்லை; இந்திய அதிகாரிகளைக் காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்றெல்லாம் இந்தியர்கள் ஆதங்கப்பட்டு அல்லல்படும் வேளையில், அதைச் சரிசெய்தவதற்கான நடவடிக்கைக்குப் பதிலாக, சண்முகம் வெற்று அறிக்கை வெளியிட்டிருப்பதாக சிவசுப்பிரமணியன் கடுமையாக சாடி உள்ளார்.



