
சிகாம்புட் கராத்தே பயிற்சி மைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் மக்கள் கருத்து
கோலாலம்பூர்,ஆக.11-
நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிகாம்புட் கராத்தே பயிற்சி மைய பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காணப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் கராத்தே விளையாட்டின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் மாஸ்டர் பொன்னையா குடும்பத்தினர் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியபாகும் என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
பொன்னையா குடும்பத்தினர் நாட்டிற்கு அதிகமான பதக்கங்களை பெற்று தந்து பெருமை சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு கிடைத்த வெகுமநி பயிற்சி மைய உடைப்புதான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மாஸ்டர் பொன்னையா, மாஸ்டர் தென்னவன் தலைமையில் செயல்பட்டு வந்த சிகாம்புட் கராத்தே பயிற்சி மையம் அண்மையில் உடைக்கப்பட்டது பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவொரு சட்டவிரோத இடம், அங்கு பயிற்சி வழங்குவது தனக்கு தெரியாது என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
கராத்தே விளையாட்டில் பல சாதனைகளை படைத்த மாஸ்டர் பொன்னையாவின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை வீதியில் இறங்கி போராட விட்டது மாபெரும் தவறாகும். இந்த இடத்திற்கு பலமுறை வருகை மேற்கொண்டுள்ள ஹன்னா இயோ இது குறித்து தனக்கு தெரியாது என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹன்னா இயோ தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.



