பேராக் மாநில ம.இ.காவின் செயல் திட்டங்கள் குறித்து மந்திரி புசாருக்கு விளக்கமளித்தார் தான்ஸ்ரீ எம். இராமசாமி
ஈப்போ,அக்.2-
பேராக் மாநில ம.இ.காவின் செயல்திட்டங்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர் தான்ஸ்ரீ எம். இராமசாமி மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட் அவர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் தான்ஸ்ரீ இராமசாமி தமது தலைமையிலான மாநில ம.இ.காவின் செயல்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வரிடம் விளக்கமளித்துள்ளார். மேலும் பேராக் மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை முதல்வரின் கவனத்திற்கு தான்ஸ்ரீ இராமசாமி கொண்டு சென்றார்.
கட்சியை வலுப்படுத்தி, சமுதாயத்துடன் அணுக்கமான உறவினை மேம்படுத்தும் பேராக் மாநில ம.இ.காவின் நடவடிக்கைகள் மற்றும் முயற்சியை டத்தோஸ்ரீ சாராணி பெரிதும் வரவேற்றார்.
தேசிய முன்னணி தோழமை உணர்வுடன் மாநில ம.இ.காவின் செயல்திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் டத்தோஸ்ரீ சாராணி உறுதி கூறியதாக தான்ஸ்ரீ இராமசாமி தெரிவித்தார்.



