
மஇகாவின் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்னை பொருளாளராக நியமித்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவருக்கும் நன்றி தேசியத் தலைவரின் இலக்குகள் வெற்றி பெற பாடுபடுவேன் டத்தோ சிவக்குமார் உறுதி
கோலாலம்பூர்,அக்.8-
ம.இ.கா எனும் தாய்க்கட்சியின் மிகப்பெரிய பொறுப்பான மஇகாவின் புதிய பொருளாளர் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை நம்பிக்கைக்குரிய வகையில் நிறைவேற்றவுள்ளதாக டத்தோ ந.சிவக்குமார் கூறினார்.
ம.இ.காவின் பொருளாளர் பதவிக்கு என்னை நியமனம் செய்த ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகிய இருவருக்கு டத்தோ சிவக்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த இரு தலைவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வேன். ம.இ.காவில் அதிகமான இளைஞர்களை கொண்டு வரும் இலக்கில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செயல்பட்டு வருகிறார். அவரது இலக்கை கண்டிப்பாக பூர்த்தி செய்வேன் என்று தேசம் ஊடகம் தொடர்பு கொண்ட போது டத்தோ சிவக்குமார் அவ்வாறு தெரிவித்தார்.
மஇகாவின் 2024-2027ஆம் ஆண்டுகளுக்கான பொருளாளராக டத்தோ சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என் மீது நம்பிக்கை வைத்து தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை முன்னேடுப்பேன் என்று டத்தோ சிவக்குமார் உறுதி கூறினார்.
ம.இ.கா எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரையும் நம்பி இருக்கக் கூடாது என்பது தேசிய தலைவரின் முக்கிய இலக்காக உள்ளது.
கட்சி சொந்த காலில் நிற்க வேண்டும். அந்த வகையில் மூன்று கட்டட தொகுதிகளைக் கொண்ட பிரம்மாண்ட மஇகா கட்டிடத்தை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ள தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கட்சியின் பல திட்டங்களையும் முன்னேடுத்துள்ளார்.
இத்திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற கட்சியின் தலைமைத்துவத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன். கட்சியின் நிதி வளம் வலுவாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று டத்தோ சிவக்குமார் மேலும் சொன்னார்.



