Malaysia

ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனை கார் நிறுத்தும் இட பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தகவல்

ஈப்போ, அக்.8-
ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனை கார் நிறுத்தும் இட பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பார்வையிட்டபோது கூறினார்.

இம்மருத்துவமனை 100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை இந்நாட்டின் 3 வது பெரிய மருத்துவமனை இம்மருத்துவமனையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த கார் நிறுத்தும் இடம் சர்ச்சை கடந்த இரு வருடங்களாக சுமுகமாக தீர்வு காணப்பட்டு வந்த து. ஆனால், தற்போது மருத்துவமனையின் பிரதான சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்களுக்கு சம்மன் வழங்கப்பட்ட புகார்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இந்த மருத்துவமனை வளாகத்தில் 670 கார் நிறுத்தும் இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இங்கு பணியாற்றுபவர்கள் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அத்துடன், நோயளிகளை பார்க்கவரும் நபர்கள் மற்றும் அன்றாட சிகிச்சைகள் மேற்கொள்ளவரும் வெளி நோயளிகள் என்று பலரும் இங்கு வருவதால், கார் நிறுத்தும் இட பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் பொதுமக்கள் பேருந்து நிற்கும் நிழற்குடை முன், மருத்துவமனை நுழைவாசல் மற்றும் வெளியேறும் வாசல், மருத்துவனை அருகாமையிலுள்ள சாலை வட்டத்திலும் ஒருபோதும் காரை நிறுத்த வேண்டாம். இதனைத் தவிர்த்து மற்ற இடங்களில் சாலையின் இரு வழிகளிலும் காரை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்விவகாரத்தில் போலீஸ் தரப்பினரும், ஈப்போ மாநகர் மன்றத்தினரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.குறிப்பிட்ட இந்த மூன்று இடங்களில் நிறுத்தப்படும் கார்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும்; மற்ற இடங்களில் காரை நிறுத்தினால் எந்தவொரு சம்மனும் வழங்கப்படாது என்று அவர் உறுதியுடன் சொன்னார்.

இந்த கார் நிறுத்தும் இட பற்றாக்குறை பிரச்சினைக்கு ஈப்போ மாநகர் மன்றம் ஈப்போ ஸ்டேடியத்தின் அருகிலுள்ள ” வெல்ரோன் ராக்யாட்” வளாகத்தில் கார் நிறுத்தும் இடங்களுக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளனர். பொதுமக்கள் இந்த இடத்தில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து மருந்துவமனைக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆகையால், பொதுமக்கள் இந்த இடத்தையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

இங்கு கிரின்டவுன் கிளினிக் முன்புறத்தில் அடுக்குமாடி கார்நிறுத்தும் இட கட்டுமானப்பணி தொடங்க நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை ஒரு சீன நாட்டு நிறுவனம் குத்தகையாளராக முன்வரவதாக கூறியும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ஆகவே, யாரேனும் அல்லது எந்தவொரு குத்தகையாளர்களுக்கும் ஆர்வம் இருந்தால் தொடர்புக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பில், ஈப்போ மாவட்ட காவல்துறை அதிகாரிகள், ஈப்போ மாநகர் மன்ற போக்குவரத்து அதிகாரிகள், ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனை அதிகாரிகள் ஆகியோர் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனுடன் கலந்துக் கொண்டு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button