
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதி விவகாரம் இனி ஒவ்வோர் ஆண்டும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு குரல் கொடுத்த டத்தோஸ்ரீ எம்.சரவணன் பாராட்டுக்குரியவர்
புத்ரா ஜெயா,நவ.28-
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிதியுதவி பெற முடியும் என்ற பரிந்துரைக்கு டத்தோஸ்ரீ சரவணன் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக இனி ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் நிதியை பெற்ற ஆலயங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிதிக்கு விண்ணப்பிக்க முடியாது என கொண்டு வந்த புதிய நிபந்தனைக்கு பகிரங்க எதிர்ப்பு கிளம்பியது.
இந்த புதிய நிபந்தனைக்கு மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார், அரசு சாரா இயக்கங்கள் உள்ளிட்ட பலர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த எதிர்ப்பு அலைகளை தொடர்ந்து விண்ணப்பிக்க தகுதியுடைய அனைத்து முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களும் ஆண்டுதோறும் பராமரிப்பு உதவிக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் அமைச்சின் நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் ங்கா கோர் மிங் சொன்னார்.



