
தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா டத்தோஸ்ரீ எம்.சரவணன் “சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருது வழங்கி கௌரவிப்பு
பண்டார் சௌஜானா புத்ரா,டிச.18-
தேசம் ஊடகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சாதனையாளர்கள் விருதளிப்பு விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் “சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தேசம் ஊடகத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாஹ்சா பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற 7ஆம் ஆண்டு விருதளிப்பு விழாவில் டத்தோஸ்ரீ சரவணனை
தேசம் ஊடகம் எழுவர் கொண்ட நீதிபதி குழு மூலம் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து விருது வழங்கியது.
தேசம் தோற்றுநர் குணாளன் மணியம் அந்த விருதை டத்தோஸ்ரீ சரவணன் அவர்களிடம் எடுத்து வழங்கினார்.
தாப்பா நாடாளுமன்றத்தில் கடந்த 2008 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் டத்தோஸ்ரீ சரவணன், தொகுதி மக்களின் அன்பை பெற்றதன் விளைவாகவே நான்கு தவணைகள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தொகுதி மக்களுடன் நல்ல அணுக்கமான உறவு கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ சரவணன் “சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.
இந்த தேசம் ஐகோன் விருது விழாவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் பேசுகையில் விருது அங்கீகாரம் ஒருவருக்கு மிகச்சிறந்த ஊக்குவிப்பாகும் என்பதால் தொடர்ந்து விருது விழாவை நடத்துங்கள் என்று குணாளன் மணியத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
மலேசியாவில் விருது விழாவை நடத்திய முதல் ஊடகம் என்று பெயர் பெற்றுள்ள தேசம் விருது விழாவிற்கு 2017 தொடங்கி தொடர்ந்து தவறாமல் வருவதாகவும் 2017இல் திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல் விருது விழாவில் கலந்து கொண்டது மறக்க இயலாது என்று டத்தோஸ்ரீ சரவணன் நினைவு கூர்ந்தார்.
தேசம் ஊடகம் கடந்த 31.8.2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024இல் 15ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடிய நிலையில் 7ஆம் ஆண்டாக நடைபெற்ற விருது விழாவில் மலேசிய இளம் தொழில்முனைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர், மாணவர் என்று 70 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



