
கிள்ளான் ராஜா மஹாடி தேசிய இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய பாட விவகாரம் சிலாங்கூர் ம.இ.கா மாநில கல்வி இலாகாவுக்கு வழங்கிய கடிதத்தின் எதிரொலி பாட அட்டவணை நேரத்தில் பாடம் போதிக்க பள்ளி நிர்வாகம் இணக்கம் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் தகவல்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கிள்ளான்,பிப்.25-
கிள்ளான் ராஜா மஹாடி தேசிய இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வகுப்பு பாட அட்டவணை நேரத்தில் போதிக்கப்பட வேண்டும் என்ற சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் சிலாங்கூர் கல்வி இலாகாவுக்கு வழங்கிய கடிதத்தின் எதிரொலியாக பாட அட்டவணை நேரத்தில் போதிக்க பள்ளி நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களை பாட அட்டவணை நேரத்தில் போதிப்பதுதான் சிறந்தது என்றும் பாட நேரத்திற்கு பிறகு தனியாக போதிப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறி டத்தோ சங்கர் ராஜ் சிலாங்கூர் கல்வி இலாகாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த கிள்ளான் ராஜா மஹாடி தேசிய இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழி பாட விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதால் இது விஸ்வரூபம் எடுத்திருந்தது. கோத்தா ராஜா தொகுதிக்கு உட்பட்ட ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளியி்ல் பாட நேரத்தில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களை பாட நேரத்தில் போதிக்க வேண்டும் என்ற மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாட அட்டவணை நேரத்தில் போதிக்க நடவடிக்கை மேற்கொண்ட சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவுக்கு டத்தோ சங்கர் ராஜ் நன்றி தெரிவித்து கொண்டார்.
இந்த நேர மாற்றம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் மாணவர்கள் வாடகை கார் நேரம் மற்றும் மதிய உணவு நேரம் போன்றவை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் இப்பாடங்களை பாட அட்டவணை நேரத்திலேயே போதிக்க வேண்டும் என்று டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் கடிதம் வழி கோரியிருந்தார்.
இந்த 2025ஆம் ஆண்டு 150 மாணவர்கள் தமிழ்மொழியையும் 140 மாணவர்கள் தமிழ் இலக்கியத்தையும் தேர்வு செய்து கல்வி பயில்கின்றனர். இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வில் 190 மாணவர்கள் தமிழ்மொழி பாடத்தையும் 150 மாணவர்கள் தமிழ் இலக்கிய பாடத்தையும் தேர்வு எழுதவுள்ளனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததாக டத்தோ சங்கர் ராஜ் தெரிவித்தார்.
இப்பள்ளியில் அதிகமான இந்திய மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுப்பதால் அவர்களின் எதிர்கால நலன் குறித்து பள்ளி நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமையாகும் என்றும் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் கல்வி இலாகாவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விவகாரத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஒரு காரணம் என்றால் அதற்கு தீர்வு காண வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும் என்றும்
சிலாங்கூர் மாநில கல்வி இலாகா நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநில கல்வி இயக்குநர் டாக்டர் ஜெஃப்ரி அபுவிடம் கடிதம் வழங்கியதன் விளைவாக பள்ளி நிர்வாகம் பாட நேரத்தில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய பாடங்கள் போதனை நடத்த பள்ளி நிர்வாகம் இணக்கம் தெரிவித்ததற்கு டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் நன்றி தெரிவித்துள்ளார்.



