
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு 50 மீட்டர் தூரத்தில் 4,000 சதுர அடியில் புதிய நிலம் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 25-
நாட்டில் சர்ச்சையாக இருந்த மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்திற்கு தற்போது சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு அருகில் மஸ்ஜிட் மடானி பள்ளிவாசல் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட வேளையில் வரும் 27ஆம் தேதி நடைப்பெறவுள்ள இந்த கல் நிறுத்தும் விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் என்ன நடக்கிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது சுமுகமான தீர்வு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஜாலெஹா அலவலுவகத்தில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த தீர்வு கிடைத்ததாக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
தற்போது அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் 4,000 சதுர அடியில் புதிய நிலம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அதற்கான உறுதி கடிதத்தை அமைச்சர் ஆலயத்தின் பிரதிநிதி பார்த்திபனிடம் வழங்கியுள்ளார். இதன் வாயிலாக அந்த ஆலயம் தொடர்ந்து மஸ்ஜிட் இந்தியாவில் செயல்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் சொன்னார்.
அதேநேரத்தில் தற்போது ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலத்திற்கு நிரந்திர நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த புதிய ஆலயம் கட்டி முடிக்கும் வரை தற்போதைய இடத்தில் ஆலயம் இயங்குவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சொன்னார்.
இது இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. ஒற்றுமையாக இருந்தால் நாம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது.
இந்த வேளையில் அரசாங்கத்திற்கும், பிரதமருக்கும், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் மற்றும் ஆலயத்தை பாதுக்காக துணை நின்ற எல்லோருக்கும் தாம் நன்றியை தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார்.



