Malaysia

தமிழ்ப் பத்திரிகையாளர் சரவண தீர்த்தாவின் மகள் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதி

சிரம்பான்,ஏப்.13-மலேசியத் தமிழ் ஊடகத்தில் நீண்ட காலமாக பயணிக்கும் ஊடகவியலாளர் சரவண தீர்த்தாவின் மகள் சமேதா கிருஷ்ணா விபத்து காரணமாக ஒன்றரை மாதங்களாக சிரம்பான் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிலும் எவரையும் சார்ந்திராமல் தன்னிச்சையாகவும் துணிவாகவும் முற்போக்காகவும் செயல்படக்கூடிய சமேதா, கடந்த பிப்ரவரி மாதம், 21 ஆம் நாள் உலக தாய்மொழி நாளன்று சிரம்பான் அருகில் செண்டாயான் பகுதியில் உள்ளூர் சாலையில் கடுமையான விபத்திற்கு ஆளானார்.

சம்பவத்தன்று சமேதா பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை, கட்டுப்பாடு இல்லாத வேகத்தில் வந்த யாரோ ஒரு வாகன ஒட்டி, இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட நிலையில், தடுமாறிய சமேதா, பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தில் மோதி இடுப்பு எலும்பு முறிவுக்கு ஆளானார்.

மேலும் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக தொடர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான சரவணா தீர்த்தா, அன்றாடம் மருத்துவமனைக்குச் சென்று மகளை பார்த்துவிட்டு மற்ற பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக பள்ளிக்கும் டியூஷன் மையங்களுக்கும் என அலைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மகளுக்கான அதிக மருத்துவ செலவினால், பொருளாதார அளவில் சற்று தடுமாறி வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் சமீராவுக்கு ஏப்ரல் 10ஆம் நாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உடைந்த இடுப்பு எலும்புகளை இணைப்பதற்காக இரும்புத் தகடு பொருத்தி ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தொற்றும் புண்ணும் ஏற்பட்டிருப்பதால் அறுவை சிகிச்சை செய்த இடத்திலேயே மறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வலி மிகுதியால் சமேதா அதிக வேதனைப்பட்டதை அடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்த சிறப்பு மருத்துவர்கள் தொற்று ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்ததால் மீண்டும் இந்த அறுவை சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது என்றும் அதேவேளை இரும்புத் தகட்டிற்கு பதிலாக அந்த இடத்தில் மெல்லிய கம்பிகளை இணைக்க முடியுமா என்பது பற்றியும் இந்த அறுவைச் சிகிச்சையின் போது சிறப்பு மருத்துவர் ஆலோசித்ததாகவும் சரவண தீர்த்தா மேலும் சொன்னார்.

“சிரம்பான் அரச மருத்துவமனையில் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் மகளால் தற்பொழுது நடக்கவோ நிற்கவோ முடியாது; குறைந்தது ஓராண்டு காலத்திற்கு சக்கர நாற்காலியில்தான் இயங்க வேண்டி இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்று தெரிவித்த சரவணன் தீர்த்தா ..,

“சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தான், மகளுக்கான மருத்துவ செலவை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆகையால், இயன்றவர்கள் நிதி உதவி அளித்திடும்படி கைகூப்பி வேண்டுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் சரவண தீர்த்தாவுடன் பேசவோ விவரம் அறியவோ விரும்புவோர் 016-2921634
என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button