
இந்திய சமுதாயத்தின் ஆலயம், தமிழ்ப்பள்ளி, கல்வி ஆகியவற்றின் நலன் காக்கும் ஒரே கட்சி மஇகாதான்! பேராக் மாநில ம.இ.கா மாநாட்டில் தான்ஸ்ரீ ராமசாமி சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்,
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
சுங்கை சிப்புட், ஆக.2-
இந்திய சமுதாயத்தின் கல்வி, ஆலயம், சமயம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சி ம.இ.கா என்று பேராக் மாநில ம.இ.கா தலைவர் தான்ஸ்ரீ ராமசாமி சூளுரைத்துள்ளார்.
இந்தியர்களின் நலன் காக்கவும் குரல் கொடுக்கவும் உள்ள ஒரே கட்சி மஇகாதான். அதனை தவிர வேறு கட்சி இல்லை. புதிதாக பிறக்கவும் முடியாது.
நமது சமுதாயம், சமயம், மொழி, தமிப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றை காக்கும் தார்மிக பொறுப்பை மஇகா கொண்டுள்ளது. அதனை இதுவரை முறையாக செய்து வருவதாக தான்ஸ்ரீ ராமசாமி தெரிவித்தார்.
ஆலய பிரச்சினைகள் என்றாலும் இனம் சம்பந்தமான பிரச்சினை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது மஇகாதான். அதனால்தான் மஇகா இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் தாய்க்கட்சியாக விளங்கி வருவதாக சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் நடைப்பெற்ற பேரா மாநில மஇகாவின் 79ஆவது பேராளர் மாநாட்டில் பேசியபோது தான்ஸ்ரீ ராமசாமி அவ்வாறு சொன்னார்.
மஇகாவை மேலும் வலுப்பெற செய்ய கட்சியில் அதிகமான இளைஞர்களை கொண்டு வரவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்கும் முன் நம் கட்சியில் அதிக வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் தான்ஸ்ரீ ராமசாமி கூறினார்.
இந்திய சமுதாயத்தின் உறுமாற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியம். அந்த வகையில் மஇகா ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றை அமைந்தது. இந்த இரு உயர்க்கல்விக் கூடங்களில் கீழ் பல மாணவர்களுக்கு கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் தான்ஸ்ரீ ராமசாமி தெளிவுபடுத்தினார்.
தேசிய மஇகா உருவாக்கும் சமூகநல திட்டங்களுக்கு பேரா மாநில மஇகா உறுதுணையாக இருக்கும். பேரா மாநில 79ஆவது பேராளர் மாநாட்டை மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்து சிறப்புரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



