
பிற அரசியல் கட்சிகளுடன் விவாதிக்காவிட்டால் மஇகாவுக்கு வேறு என்ன வழி?’ மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா கேள்வி!
கோலாலம்பூர், ஆக. 6- மலேசிய இந்திய சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க, பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால் மஇகாவுக்கு வேறு என்ன வழி உள்ளது என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சமூகத்திற்கு உதவும் முயற்சியில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அல்லது ஒத்துழைப்பது தவறல்ல, மாறாக இது தற்போதைய அரசியல் சூழலின் தேவை என டத்தோ முருகையா கூறினார்.
“இந்திய சமூகத்தின் நலன்களுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் ஒரு கட்சியாக, நமது அரசியல் அணுகுமுறையில் திறந்த மனதுடனும், முதிர்ச்சியுடனும், வியூகத்துடனும் இருக்க வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன் என்று ஒரு அறிக்கையில் டத்தோ டி.முருகையா தெரிவித்துள்ளார்.
“அம்னோ, பிகேஆர், Dap, மசீச, பாஸ், பெர்சத்து அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுடனும் விவாதிப்பதோ அல்லது ஒத்துழைப்பதோ தவறு அல்ல. மாறாக, இந்திய சமூகம் நாட்டின் வளர்ச்சியில் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இது ஒரு தற்போதைய அரசியல் தேவை,” என்று டத்தோ முருகையா வலியுறுத்தியுள்ளார்
தங்கள் நிலைப்பாட்டையும் வியூகத்தையும் மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். மேலும், கட்சியின் நலனை விட இந்திய சமூகத்தின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்றும், குறுகிய கட்சி அரசியலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று டத்தோ முருகையா மஇகா தலைமைத்துவத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
“அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக நலன்களை நாம் முன்னிறுத்த வேண்டும். வெளியில் உள்ள இந்திய சமூகம் வெறும் சொல்லாட்சியையும் வாக்குறுதிகளையும் மட்டும் அல்ல, உண்மையான மாற்றத்தைக் காண விரும்புகிறது. இன்றைய சிக்கலான அரசியல் நிலப்பரப்பில் நாம் தனியாகச் செயல்பட முடியாது,” என்று டத்தோ முருகையா தெரிவித்தார்.
இந்திய சமூகத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் எந்தவொரு கட்சி அல்லது சித்தாந்தப் பின்னணியையும் கருத்தில் கொள்ளாமல், நேர்மையாக ஒத்துழைக்க விரும்பும் எந்தவொரு தரப்புடனும் உரையாடலுக்கு மஇகா திறந்த மனதுடன் இருப்பதாக டத்தோ டி. முருகையா குறிப்பிட்டுள்ளார்.



