
ம இ கா கிளைத்தலைவர்களின் பிள்ளைகளுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் கல்விநிதியுதவி மாணவர்களும் பெற்றோர்களும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொள்கின்றனர்
ஈப்போ, ஜன. 27- உயர்கல்வி கூடங்களில் தங்களின் உயர்கல்வியை தொடரவுள்ள ம இ கா வின் கிளைத்தலைவர்களின் பிள்ளைகளுக்கு ம இ கா 10 ஆயிரம் ரிங்கிட் கல்வி நிதியுதவி வழங்கி வருகிறது என்று இங்குள்ள பேராக் மாநில ம இ கா பணிமனையில் நான்கு ம இ கா கிளைத்தலைவர்களின் பிள்ளைகளுக்கு கல்விநிதி வழங்கியபோது ம இ கா வின் உதவித்தலைவரும், பேராக் மாநில ம இ கா வின் தலைவருமான டான்ஸ்ரீ எம்.இராமசாமி கூறினார்.
இத்தகைய கல்விகடனுதவி திட்டம் ஒரு குடும்பத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படவுள்ளது. ஆகையால் இத்தகவலை ம இ கா கிளைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பி40 இந்திய குடும்ப மாணவர்கள் உயர்கல்வி தொடர கல்விகடனுதவி திட்டம் வழக்கம் போல வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இவ்வாண்டு மார்ச் 1ம் தேதியில், பேராக் ம இ கா தலைமையில் மாணவர்களும் பெற்றோர்களும் சுமார் 1000 பேர் கொண்ட குழுவினர் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மற்றும் அங்கு உயர்கல்வி பயில வசதிகள் குறித்து அறிவதோடு, மாணவர்களுக்கு இப்பயணம் தன்முனைப்பாக அமையும் என்று தம் கருத்தை அவர் பதிவு செய்தார்.
உயர்கல்வியை தொடரும் நான்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகையளித்து காசோலையை பெற்றுக்கொண்டனர். அவர்களில், மகா சக்தி ராஜேந்திரன்( கோலகங்சார்), முருகன் மனோகரன்( தஞ்சோங் மாலிம்), வைஷ்ணவி ராஜசேகரன்( பாகான் டத்தோ) மற்றும் லாவண்யா ராஜா( லங்காப்) என்பது குறிப்பிடத்தக்கது.



