
பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பு நிர்வாகம் குடியிருப்பாளர்களுக்கு மனரீதியில் தொல்லை கொடுத்து வருகிறதா?
பத்துகேவ்ஸ், ஜன.30-
பத்துகேவ்ஸ் சிம்போனி ஹய்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்பு நிர்வாகம் குடியிருப்பாளர்களின்
உணர்வைத் தூண்டும் வகையில் மனரீதியில் பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு நிர்வாகத்தை நடத்தி வரும் நடப்பு பராமரிப்பு நிர்வாகம் அடுக்குமாடி கட்டடத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளை கவனிக்காமல் அவர்களின் மின்தூக்கிக்கான Access Card எனப்படும் மின்னியல் அட்டையை ரத்து செய்வது, தண்ணீர் தொடர்பை துண்டிப்பது, வாகன நிறுத்தத்திற்கான மின்னியல் அட்டையை ரத்து செய்வது போன்ற தொல்லைகள் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்பாளர்கள் சிலர் தேசம் டிவியிடம் தெரிவித்தனர்.
கோவிட் காலத்திற்கு பிறகு அதாவது 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இன்னமும் மேம்படுத்தி வருகின்றனர். பலர் இன்னமும் அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சிம்போனி ஹய்ட்ஸ் குடியிருப்பாளர்கள் சிலரின் நிலைமையும் அப்படித்தான் உள்ளது.
இதனால் சிலரால் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு கட்டணத்தை கட்ட முடியாமல் போய்விடுகிறது. இந்த கட்டணம் பெருகிப் பெருகி கூடுதல் தொகையை அடைந்து விடுகிறது. இதனை மனிதாபிமான அடிப்படையில் வசூலிக்க வேண்டுமே தவிர மின்தூக்கி மின்னியல் அட்டையை ரத்து செய்வது, வாகன மின்னியல் அட்டையை ரத்து செய்வது, தண்ணீர் தொடர்பை துண்டிப்பது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த தொல்லையாக இருப்பதாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
லிப்ட் Access Cardடை ரத்து செய்வதால் ஏற்படும் பின்விளைவுகளை சிம்போனி ஹய்ட்ஸ் பராமரிப்பு நிர்வாகம் உணர்ந்துள்ளதா? இப்படி மின்னியல் அட்டை ரத்து செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் எப்படி கீழே இறங்க முடியும்? ஆபத்து அவசர வேளைகளில் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படி கீழே இறங்குவார்கள்? உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டால் சிம்போனி ஹய்ட்ஸ் பராமரிப்பு நிர்வாகம் பொறுப்பேற்குமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இது மட்டுமன்றி தண்ணீர் தொடர்பை நிறுத்தி விடுகிறார்கள். சட்டப்படி பராமரிப்பு நிர்வாகம் இப்படி செய்ய முடியுமா? பராமரிப்பு கட்டத்தை கட்ட முடியாதவர்களின் பெயர்களை பட்டியலிட்டு பகிரங்கமாக ஓட்டி விடுகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிம்போனி ஹய்ட்ஸ் பராமரிப்பு நிர்வாகம் உணர்ந்துள்ளதா?
இந்த பராமரிப்பு கட்டணங்களை மனிதாபிமான அடிப்படையில் வசூலிக்க வேண்டுமே தவிர, தொல்லை கொடுத்து வசூலிப்புது நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையில் புகார் செய்ய குடியிருப்பாளர்கள் சிலர் முடிவெடுத்துள்ளனர். அதேநேரத்தில் அரசு சாரா இயக்கங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்க துறைகள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



