
கோல குபு பாரு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் டத்தோ லோகபாலா மோகன் வேண்டுகோள்
தேசம் செய்தியாளர் குணாளன் மணியம்
கோல குபு பாரு, மே 8-
கோல குபு பாரு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் வலியுறுத்தியுள்ளார்.
யாருக்கு வாக்களித்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உணர்ந்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிக்க வேண்டாம் என்று கூறுபவர்களை புறக்கணித்து விட்டு மே 11ஆம் தேதி மக்கள் வாக்களிக்க திரண்டு வரும்படி டத்தோ லோகபாலா மோகன் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், உலு சிலாங்கூர் மைபிபிபி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டம் கோலகுபு பாரு ராசாவில் நடைபெற்றது. ராசா வட்டாரத்தை சேர்ந்த 500 வாக்காளர்கள் திரண்டு வந்து முழு ஆதரவு வழங்கினர்.
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடுவும் இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மைபிபிபி கட்சிக்கு அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



