
சங் சூரியா அடுக்குமாடி வீடுகளுக்கான உரிமை பட்டாவை 14 நாட்களுக்குள் வழங்குக! தவறினால் நடவடிக்கை! மேம்பாட்டு நிறுவனத்திற்கு டத்தோ கலைவாணர் எச்சரிக்கை
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூன் 22-
தலைநகரில் மிகவும் புகழ் பெற்ற சங் சூரியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் அங்கு வசித்து வரும் டத்தோ ராஜாராம் என்னிடம் கூறியிருந்தார். சங் சூரியா அடுக்குமாடி வீடுகளுக்கான உரிமை பட்டா வழங்க மேம்பாட்டு நிறுவனத்திற்கு 14 நாட்கள் காலக்கெடு வழங்கப்படுவதாக மெட்ராஸ் காபேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ கலைவாணர் அவ்வாறு தெரிவித்தார்.
இந்த 14 நாள் காலக்கெடுவிற்குள் உரிமை பட்டாவை வழங்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ கலைவாணர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற டத்தோ ராஜாராம் மற்றும் அவரது துணைவியார் இருவரும் பல ஆண்டுகள் அங்கு வசித்து வருகின்றனர். வீட்டிற்காக வாங்கிய கடனை செலுத்தி வருகின்றனர். பராமரிப்பு கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் அவர் முறையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சங் சூரியா வீடு அவரின் பெயரில் இல்லை. காரணம் மேம்பாட்டு நிறுவனம் Strata title எனப்படும் வீட்டு உரிமை பட்டாவை வழங்கவில்லை.
இவர் மட்டும் இந்த பிரச்சினையை எதிர்நோக்கவில்லை. மாறாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 380 வீட்டு உரிமையாளர்களும் இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் என்று டத்தோ கலைவாணர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட மேம்பாடு நிறுவனம் தொடர்ந்து காரணம் மட்டுமே கூறி வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் அக்குடியிருப்பு உரிமையாளர்களுக்கு அப்பட்டாவை வழங்க வேண்டும் என்று டத்தோ கலைவாணர் கேட்டுக் கொண்டார்.
இந்த உரிமை பட்டா விவகாரம் தொடர்பில் அடுத்த 14 நாடுகளுக்குள் அம்மேம்பாட்டு நிறுவனம் இந்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ கலைவாணர் வலியுறுத்தியுள்ளார்.



