
15 தொழிலாளர்கள் வேலை நீக்கம் தொழில் உறவு இலாகாவிடம் புகார் செய்யும்படி ஆலோசனை- அ.சிவநேசன்
ஈப்போ, ஆக. 3- மஞ்சோங்கை தலைமையாக கொண்டு ஈப்போவில் கிளை நிறுவனத்தை உருவாக்கி செயல்படும் நிறுவனம் அதிரடியாக 15 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தம்மை சந்தித்து புகார் செய்துள்ளனர். அவர்கள் அடுத்தக்கட்ட எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக பேராக் மாநில மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை , இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இத்தொழிலாளர்கள் கடந்த மாதம் 25 ம் தேதி முதல் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்டுள்ள ” லோஜிஸ்திக்” நிறுவனம் கடிதம் வெளியிட்டுள்ளனர். இதற்கு முதன்மை காரணம் அந்நிறுவனம் 4000 பொட்டலங்களை விநியோகம் செய்து வந்தது.
ஆனால், தற்போது 2000 பொட்டலங்களை மட்டுமே விநியோகம் செய்து வருவதால், ஆட்குறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் இந்த 15 தொழிலாளர்கள் நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இந்த நிறுவனத்தின் அறிவிப்பில் உண்மையான கூற்றுகள் உள்ளனவா என்று ஆராயப்படும். குறிப்பாக, இவர்களை வேலை நீக்கம் செய்து விட்டு தற்போது இரு வேறு தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
அத்துடன், இவர்களின் தொழிலாளர்களுக்கு சொக்சோ மற்றும் சேமநிதி வாரியம் போன்ற சந்தாவை இந்நிறுவனம் செலுத்தியுள்ளதா போன்ற பிரச்சினைகளும் அலசி ஆராய்ந்து, இந்த தொழிலாளர்களின் கோரிக்கை முன்னிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த 15 தொழிலாளர்களும் தொழில் உறவு 1967 என்ற பிரிவின் கீழ் விரைவில் புகார் செய்ய வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் இப்பிரிவின் கீழ்தான் தங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும். அண்மையில் இவர்கள் தவறுதலாக தொழிலாளர் இலாகா 1955 பிரிவின் கீழ் புகார் செய்துள்ளதுள்ளனர். ஆதலால், தற்போது முறையாக ஆலோசனை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
தொழில் உறவு இலாகா வாயிலாக இரு தரப்பினரிடையே சமரசம் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். அப்படி தீர்வு காண முடியவில்லையென்றால் மனிதவள அமைச்சரின் உதவியோடு தொழில் உறவு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம். இதன் வாயிலாக வேலை மீண்டும் கிடைப்பதற்கும், நஷ்டஈடு கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்று அவர் கருத்துரைத்தார்.
சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களை விரைவில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, சட்ட மீறல் மற்றும் புதிய தொழிலாளர்களை வேலைக்கு நியமனம் செய்தல் போன்ற விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியாக கூறினார்.



