
குறைந்த வருமானம் பெறும் 200 பேருக்கு மோட்டார் சைக்கிள் வாங்க 1,000 வெள்ளி நிதியுதவி
ஷா ஆலம், ஆக. 5- குறைந்த வருமானம் பெறும் 200 பேருக்கு மோட்டார் சைக்கிள் வாங்க முன்பணமாக தலா 1,000 வெள்ளி உதவிநிதி வழங்கப்பட்டுள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு மாநில செயற்குழு உறுப்பினர் வி.பாப்பா ராய்டு கூறினார்.
இந்த BikeCare-1000 திட்டத்தின் கீழ் 2 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை குறைந்த வருமானம் பெறுபவர்களின் சுமையைக் குறைக்கும் என்று என்பதில் சந்தேகமில்லை.
இதன்வழி உணவு வழங்கும் சேவையில் ஈடுபடுபவர்கள் மோட்டார் சைக்கிள்களை வாங்கலாம் என்று பாப்பா ராயுடு தெரிவித்தார்.
“மாநில அரசு 1,000 வெள்ளி தேவையுள்ள வசதி குறைந்தவர்களுக்கு முன்பணத்தை வழங்கி உதவுகிறது. மோட்டார் சைக்கிள்கள் வாங்க எஞ்சியுள்ள செலவை உதவி பெறுநர்கள் ஏற்க வேண்டும். இந்த முயற்சியால் அவர்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
“குறைந்த வருமானம் பெறுபவர்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்தவும், சம்பாதித்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிசெய்யவும் அவர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம், ”என்று நேற்று மாநில செயலகத்தில் மோட்டார் சைக்கிள்களை பெறுநர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
பந்திங் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் பாப்பா ராய்டு, தனது அலுவலகம் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, இதில் அதிகமான மக்கள் பயனடையலாம் என்றார்.



