
மலேசிய இந்து சங்கம், ஸகூடாய் பேரவை,ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் இணைந்து நடத்திய இவ்வாண்டுக்கான திருமுறை ஓதும் போட்டி
ஸ்கூடாய்,ஆக.16-
மலேசிய இந்து சங்கம், ஸகூடாய் பேரவை மற்றும் ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் இணைந்து நடத்திய இவ்வாண்டுக்கான திருமுறை ஓதும் போட்டி கடந்த 27/07/2024 சனிக்கிழமை முத்தியாரா ரினி தமிழ்ப்பள்ளியில் காலை 8.00 மணி தொடங்கி நடைபெற்றது.
இந்த திருமுறை ஓதும் போட்டியில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டி காலை நால்வர் ஊர்வலத்துடன் இனிதே துவங்கியது. திறப்புரை ஆற்றிய ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத் தலைவர் சங்கபூசன் டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை சிறப்பாக நடத்தி வரும் ஸ்கூடாய் பேரவையை பாராட்டினார். ஆலயம் என்றும் சமய நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் என்று கூறினார்.
திருமுறை ஓதும் போட்டியில் பதிகப்பாராயணம் 3 பிரிவுகளிலும், பஞ்சபுராணம் 3 பிரிவுகளிலும், தேவாரம் 6 பிரிவுகளிலும், பேச்சுப் போட்டி 4 பிரிவுகளிலும் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து நிலைகளில் வரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் முன்னதாக உரையாற்றிய துணைத் தலைவர் தொண்டர்மணி மோகனதாசு முனியாண்டி போட்டிக்கு தயாராக விதத்தையும் தேவார ஆசிரியர்களின் பங்களிப்பையும் விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு ரவின் குமார் அவர்களின் பிரதிநிதி திரு. சுப்பிரமணியம் தேவார திருமுறை வகுப்புகள் சமயத்தை போதிப்பதோடு கட்டொழுங்கையும் ஊட்டி வளர்க்கிறது என்றும் ஆகவே சமுதாயம் முன்னேற பிள்ளைகள் அனைவரும் தேவாரம் கற்பது சாலச் சிறந்தது என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து தலைமையுரை ஆற்றிய பேரவைத் தலைவர் தொண்டர்மணி க.சேகரன் போட்டிக்கு ஆதரவு நல்கிய அனைவரையும் பட்டியலிட்டார். இதில் மாநில துணைத் தலைவர் சங்கபூசன் கு.மாணிக்கம் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மாநில தமிழ்ப்பள்ளி கண்காணிப்பாளர் உயர்திரு இரவிச்சந்திரன் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தேசிய உச்சமன்ற உறுப்பினர் திரு சிவானந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதி திரு மோகன், ம இ கா இஸ்காண்டர் புத்ரி தொகுதி தலைவர் திரு V. சங்கரபாண்டியன், தொகுதி தலைவி சத்தியவாணி, தலைமையாசிரியர் திருமதி தமிழ்ச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் பிரகாஷ், தொழிலதிபர் திரு ரூபன், தொழிலதிபர் திரு குமரன், ஸ்கூடாய் பாலசுப்பிரமணியர் ஆலயத் துணைத் தலைவர் திரு. மாரிமுத்து, செயலாளர் திரு பூபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது



