
மருத்துவரான Dr சிந்துமதி கொடூரமாக கொல்லப்பட்டாரா? காவல்துறை மௌனம் சாதிப்பது ஏன்? என்னதான் நடந்தது? போலிசார் முழுமையாக விசாரிக்க வேண்டும் டத்தோ Dr கலைவாணர் கோரிக்கை
கோலாலம்பூர்,ஆக.20-
கடந்தாண்டு தாம் தங்கியிருந்த இல்லத்தில் இறந்து கிடந்த டாக்டர் சிந்துமதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் சந்தேகப்படுவதால் இது குறித்து போலிசார் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் அவரது தலைப்பகுதி பிளாஸ்டிக்கினால் சுற்றப்பட்டிருந்தது. வாய் வழியாக குப்பை பை உள்ளே திணிக்கப்பட்டுள்ளது.
அந்த பைக்குள் மருத்துவ கேஸ் வாயிலாக சுவாசக் குழாய் இணைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தக் கரை இருந்துள்ள நிலையில் காவல்துறை அதனை அப்படியே விட்டு விட்டது அதிர்ச்சியளிப்பதாக நம்பிக்கை NGO தலைவர் டத்தோ Dr கலைவாணர் கூறினார்.
சிந்துமதி இறந்து பல நாட்கள் ஆகிவிட்டதால் அவரின் உடல் அடையாளம் காண முடியாத நிலையில் பெருத்து இருந்தது.
இப்படி கொடூரமான முறையில் இறந்து கிடந்த சிந்துமதியின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற நிலையில் இவ்விவகாரத்தில் காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளதாக டத்தோ கலைவாணர் தெரிவித்தார்.
சிந்துமதி இறந்து கிடந்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு வரவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்த சம்பவம் தொடர்பில் அவருடன் சேர்ந்து கிளினிக் வைத்திருந்த ஒருவர் புகார் செய்திருந்தார். “சிந்துமதி கிளினிக்கிற்கு வரவில்லை. அவர் இறந்திருக்கலாம்” என்று அவரது கிளினிக்
பங்குதாரரின் போலிஸ் புகார் பல கேள்விகளை எழுப்பபியுள்ளதாக டத்தோ கலைவாணர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான சவப்பரிசோதனை அறிக்கை இல்லை. சிந்துமதியின் ஆடைகள் என்னவானது உட்பட பல கேள்விகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஆகையால், டாக்டர் சிந்துமதியின் மரணம் ஒரு தற்கொலை அல்ல என்பதில் அவரின் குடும்பத்தினர் உறுதியாக இருப்பதால் காவல்துறை இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக டத்தோ கலைவாணர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஐபிசிஎம்சி எனப்படும் சுயேட்சையான போலிஸ் புகார்கள், தவறான நடத்தை குறித்து விசாரிக்கும் ஆணையத்திடம் அடுத்த வாரம் புகார் செய்யப்படும். மேலும் புக்கிட் அமான் போலிஸ் தலைமையகம், தேசிய போலிஸ்படைத் தலைவர், சட்டத்துறை தலைவர் அலுவலகம், சுஹாகாம் ஆகியவற்றில் மகஜர் வழங்கப்படும் என்றார் டத்தோ கலைவாணர் கூறினார்.
கிளினிக் ஆரம்பிக்கப்பட்ட 2 மாதங்களில் சிந்துமதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த மரணத்தில் புதைந்து கிடக்கும்
மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். இதற்கு நீதி வேண்டும் என்று அவரின் தாயார் விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.



