
இந்நாட்டு இந்தியர்களின் உரிமைகள் காக்கப்படும்-பிரதமர் உறுதி
சுங்கை சிப்புட், அக்.7- ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இவர் பிரதமரான பின் திறந்த வைத்த முதல் தமிழ்ப்பள்ளி என்பதாகும். இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இப்பள்ளி 13.9 மில்லியன் ரிங்கிட் செலவில் 6 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதம் 11 ல் இப்பள்ளி திறக்கப்பட்டது. இங்கு பாலர்பள்ளி பதிவும், புதிய மாணவர்கள் பதிவும் சிறந்த முறையில் நடைபெற்று வருவதை வரவேற்பதாக இப்பள்ளியை திறந்த வைத்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்நாட்டில் இந்தியர்களுக்கு முன்னுரிமையும் முக்கியதுவமும் வழங்கப்படுகிறது. பிரச்சினைகள் தீர்வு காண சற்று காலதாமதம் ஆகலாம். ஆனால், இறுதியில் சிறந்த முறையில் தீர்வு காணப்படும். குறிப்பாக, வறுமையிலுள்ள இந்தியர்களுக்கும் உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

நம்நாட்டின் அரசியல் நிலத்தன்மை சீராகவும், சிறப்பாக இருப்பதால் அந்நிய நாடுகள் நம்நாட்டை மதிப்பளித்து பாராட்டுகின்றனர்.குறிப்பாக, அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச நாட்டிற்கு மரியாதை நிமிர்த்தமாக பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு அதிபர், பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் மலேசியாவை வெகுவாக மதிப்பதோடு தங்கள் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அந்நிய நாட்டு முதலிட்டாளர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அதற்கு முதன்மை காரணம் இந்நாட்டின் சிறந்த அரசியல் நிலைத்தன்மையாகும். குறிப்பாக, பேராக் மாநிலதில் அதிகமான முதலிட்டாளர்களின் உதவியால் ஆங்காங்கே மேம்பாடு கண்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட் குறிப்பிட்டார். சிறந்த அரசியல் நிலைத்தன்மை ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு அவசியம் என்பதனை அவர் வலியுறுத்தினார்.
இப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியத்தலைவர் சொ.தியாகராஜன் மற்றும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் பொன்மணி திருவேங்கடம் பள்ளியை திறந்து வைத்த பிரதமருக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டனர். அத்துடன், இந்நிகழ்வின் வெற்றிக்கு உதவிகள் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வில் மலேசிய கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா ஓ, பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட், நம்நாட்டின் தலைமை செயலாளர், ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கல்வி அமைச்சின் தலைமை செயலாளர், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் மற்றும் இயக்க பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



