
திமுக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவை குறித்து பெண்களின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகவும் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தஞ்சை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் தஞ்சை போலீசார் சென்றனர். கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வழக்கறிஞர் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம் போலீசாரிடம் வலியுறுத்தியதால் அங்கு சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி போலீசார் வீட்டுக்குள் சென்று உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது அவரது இல்லம் முன்பு திரண்டிருந்த திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



