
மறைந்த கவிஞர் சீனி நைனா முகமது எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல் தமிழர்களின் சாதனையையும் போற்றுகிறது. டத்தோஸ்ரீ எம்.சரவணன் புகழாரம்
கோலாலம்பூர்,மார்ச் 19-
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்காக மறைந்த கவிஞர் சீனி நைனா முகமது எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல் தமிழர்களின் சாதனையையும் போற்றுகிறது என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த தமிழ் வாழ்த்து பாடல் கலாச்சாரத்தையும், பல்வேறு துறைகளில் தமிழர்களின் சாதனையையும் போற்றுகிறது. இது தமிழர்களின் பெருமையின் வெளிப்பாடு. இதன் பாடல் வரிகளை மறைந்த கவிஞர் சீனி நைனா முகமது எழுதியுள்ளார். இது போற்றத்தக்கது என்று பாடல் அறிமுகவிழாவில் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

‘தமிழ்த் தாய் வாழ்த்து’ என்ற பாடல், தாய் தமிழைப் போற்றிப் பாடப்படும் பாடல். தமிழ் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் பாடப்பட வேண்டும். இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னோர்கள் விட்டுச் சென்ற தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம். வரலாற்றை அறிந்துகொள்வது, கடந்த கால நிகழ்வுகள் எவ்வாறு இன்றைய நிலையை மாற்றியது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

தமிழ் மொழியின் மகத்துவம் அதன் தொண்மையில் மட்டுமின்றி, காலங்கள் கடந்தும் அதன் தொடர்ச்சியில் உள்ளது. தமிழ் மொழி விரிவான வரலாற்றைக் கொண்டது மற்றும் மனிதகுல வரலாற்றில் செழுமையான இலக்கிய மரபுகளில் ஒன்றாகும். செம்மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கு கிடைத்தது சரியான கௌரவமாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



