
தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பத்து எம்பி பிரபாகரன் முழு ஆதரவு
தேசம் செய்திகள் நக்கீரன்
கோலாலம்பூர், அக்.4-
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பதாக கூறினார்.
சங்கத்தின் மறுமலர்ச்சிக்கு மித்ரா மூலம் முடிந்த உதவி செய்வதாக உறுதியளித்ததோடு சங்கத்தின் வளர்ச்சிக்காக பத்து நாடாளுமன்றம் மூலம் 10 ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்குவதாகவும் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
தலைநகரில் அக்டோபர் 4ஆம் நாள் சங்கத்தின் நிர்வாகத்தினரைச் சந்தித்த மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவருமான பிரபாகரன் தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்த அவர், மித்ராவின் மானியத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துறைத்தார்.
இந்த சந்திப்பின்போது, பத்திரிகையாளர் சங்கத்தின் ஆலோசகர் டத்தோ கு.செல்வராஜூவும் கலந்து கொண்டார்.
பிரதமரை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யும்படி தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தினர் கேட்கின்றனர். உண்மையில், ஊடக வட்டத்தைச் சேர்ந்த இந்தச் சங்கத்தினரின் வலிமையை உரிய முறையில் வெளிப்படுத்தினால், பிரதமரே நேரில் அழைத்துப் பேசுவார்.
சங்கத்தின் வலிமையை சங்கத்தினரே உணராமல் இருப்பதாக பிரபாகரன் சொன்னார்.
தன்னைப் போன்ற அரசியல்வாதிகளின் தொடர் நடவடிக்கைக்கும் மக்கள் ஆதரவுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாகரன், சங்கத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 10,000 வெள்ளி உதவிநிதி அளிக்க முன் வந்திருக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கு சங்கத்தின் சார்பில் மன்னனும் பிற பொறுப்பாளர்களும் நன்றி தெரிவித்தனர்.



