PMX - Datuk Seri Anwar Ibrahim

காசா நிவாரணக் கப்பலை வழி மறித்த இஸ்ரேல் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்துச் செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், அக்.2- Global Sumud Flotilla (GSF) நிவாரணக் கப்பலை இஸ்ரேல் மறித்துச் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து மலேசிய மற்றும் அனைத்துலகச் செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அள்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்த தகவலைப் பெற்ற பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். “மலேசிய மற்றும் அனைத்துலகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நான் வலியுறுத்துகிறேன்!” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். “இதுவொரு மனிதாபிமானப் பணி. நிராயுதபாணியான பொதுமக்களுடன் காசா மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளை இது கொண்டு சென்றது. எங்கள் நாட்டு மக்களை விடுவிக்க அரசாங்கம் தன்னால் இயன்றதைச் செய்யும்” என்று அவர் உறுதியளித்தார். இந்த மனிதாபிமானப் பணியைத் தடுப்பதன் மூலம், இஸ்ரேல் பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், இஸ்ரேலுடன் தற்போது இல்லாத உலகச் சமூகத்தின் மனசாட்சியையும் மிதித்துள்ளது என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார். இந்தக் கப்பல் வெறும் உதவிக் குழு மட்டுமல்ல, அது மனிதகுலத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அன்பின் சின்னம் என்று அன்வார் விவரித்தார். “கொடுமையான மற்றும் மனிதாபிமானமற்ற தடைகளின் கீழ் தொடர்ந்து வறுமையில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் துயரத்தைக் குறைப்பதற்கான நம்பிக்கையின் ஒளியை இது கொண்டு செல்கிறது” என்று அன்வார் குறிப்பிட்டார். குறிப்பாக மலேசியக் குடிமக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இஸ்ரேலின் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்குச் சட்டரீதியான மற்றும் முறையான அனைத்து நடவடிக்கைகளையும் மலேசியா எடுக்கும் என்றும் பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தினார். “மலேசியர்களின் பாதுகாப்பே முதன்மையானது. அவர்களின் உரிமைகளும் கண்ணியமும் மீறப்படும்போது நாங்கள் ஒருபோதும் மௌனம் காக்க மாட்டோம்,” என்று அவர் மேலும் சொன்னார். நீண்டகாலமாக நீடித்து வரும் அட்டூழியங்களும் அபகரிப்பும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளும் அபிலாஷைகளும் தொடர்ந்து மறுக்கப்படும் வரை, இந்த அழுத்தத்தையும் கோரிக்கையையும் கைவிடாமல் மலேசியா உறுதியாக நிற்கும் என்றும் பிரதமர் அன்வார் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button