
இலங்கையில் அரசு விருந்தினராக ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஜல்லிகட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்
இலங்கையில் அரசு விருந்தினராக
இலங்கை, ஜன.6-
இலங்கையில் அரசு விருந்தினர் என்ற அங்கீகாரத்துடன் ஜல்லிகட்டு நிகழ்ச்சியைத் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.
இலங்கை கிழக்கு மாகாண மேதகு ஆளுநர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்களின் அழைப்பை ஏற்று அரசு விருந்தினராக திரிகோண மலையில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு நிகழ்ச்சியை டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
தமிழர்கள், இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் என மூவினமும் அதிகமாக வாழும் திரிகோணமலையில் ஒரு வரலாற்றுப் பூர்வ நிகழ்ச்சியாக இந்த ஜல்லிகட்டு நடைபெற்றது. அதில் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஆளுநரின் சிறப்பு விருந்தினராக, அரசு மரியாதையோடு பங்குகொண்டு திறந்து வைத்தது மலேசியத் தமிழர்களாகிய நமக்கும் பெருமை சேர்க்கிறது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணனுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், முதல் முறையாக இலங்கையைக் கடந்து ஒரு தமிழருக்கு இலங்கையில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் காணப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு இப்போது பரவலாக பேசப்படுவது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியை டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தது, உலகத் தமிழர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மதிப்பையும, மரியாதையையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




